நாட்டில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்து, மிகவும் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலைமையைத் தொடர்ந்து அதிகரித்துச் செல்லும் டெங்குப் பரவலைக் தடுத்து நிறுத்துவதற்காக, சுகாதார அமைச்சின் நேரடி மேற்பார்வையில் நாடு தழுவிய ரீதியில் விசேட 6 நாள் டெங்கு ஒழிப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜூன் மாதத்தில் மாத்திரம் இதுவரை பெருமளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தால், அதனைத் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு மருத்துவமனைக் கட்டமைப்பு கடுமையான நெருக்கடியைச் சந்திக்கும். இந்நெருக்கடியைச் சமாளிப்பதற்காக, நோயாளர்களைப் பிராந்திய மற்றும் ஆரம்பக் கட்ட மருத்துவமனைகளுக்கு மாற்றும் நடவடிக்கைகள் தற்பொழுது சுகாதாரப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நாட்டின் 14 மாவட்டங்கள் டெங்கு அதிஅவதான வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. பதுளை போன்ற மாவட்டங்களில் திடீரென நோயாளர்கள் அதிகரிக்க மக்களின் மாவட்டங்களுக்கு இடையிலான நடமாட்டமே காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொருளாதாரச் செயல்பாடுகள் காரணமாக இத்தகைய பயணங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்பதால், பொதுமக்கள் விழிப்புடன் செயல்படுவது அவசியமாகிறது.
டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஜூன் 15 முதல் 20 ஆம் திகதி வரையான 6 நாட்களில் விசேட தூய்மைப்படுத்தல் நடவடிக்கைகள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி ஜூன் 15, 16, 17 ஆகிய திகதிகளில் பொது இடங்களும், 18 ஆம் திகதி கல்வி நிறுவனங்களும், 19 ஆம் திகதி அரச நிறுவன வளாகங்களும் தூய்மைப்படுத்தப்படவுள்ளதுடன், 20 ஆம் திகதி பொதுமக்கள் தங்களின் வீடுகளைச் சுத்தப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.




