60 நாட்களுக்குள் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கான ஒரு செயற்றிட்டத்துக்கு ஈரானும் அமெரிக்காவும் உடன்பட்டுள்ளதாக மத்தியஸ்தர்களான பாகிஸ்தானும் கட்டாரும் திங்கட்கிழமை (22) வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளன.
அந்த அறிக்கையில், “60 நாட்களுக்குள் இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கான செயற்றிட்டத்துக்கு உயர்மட்டக் குழு உடன்பட்டுள்ளது. இது உடனடியான அடுத்தகட்ட தொழில்நுட்ப பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கான அடித்தளத்தை அமைத்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
லெபனான் நாட்டில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்காக, லெபனானுடன் இணைந்து ஒரு “இராணுவ மோதல் தவிர்ப்புப் பிரிவை” அமைக்க இரு நாடுகளின் பிரதிநிதிகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக பாகிஸ்தானும் கட்டாரும் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளன.
“லெபனானில் இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, சம்பந்தப்பட்ட தரப்புகள் மற்றும் லெபனானுக்கு இடையே மத்தியஸ்தர்களின் உதவியோடு ஒரு இராணுவ மோதல் தவிர்ப்புப் பிரிவை உருவாக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.




