சிறைச்சாலை அனர்த்தம் அரசாங்கத்தின் இயலாமையையே காட்டுகிறது – சுஜீவ சேனசிங்க

சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் அதிகாரிகள் உயிரிழந்த சம்பவத்துக்கு அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகமே காரணமாகும். யுத்தம் நிறைவடைந்த பின்னர், இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான சிறைச்சாலை அதிகாரிகள் ஒரே தடவையில் கொல்லப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.

நேற்று வியாழக்கிழமை (10) பாராளுமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் அதிகாரிகள் உயிரிழந்த சம்பவத்துக்கு அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகமே காரணமாகும். யுத்தம் நிறைவடைந்த பின்னர், இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான சிறைச்சாலை அதிகாரிகள் ஒரே தடவையில் கொல்லப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

முதல் நாளிலேயே உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தால் இந்த அனர்த்தத்தைத் தடுத்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறைச்சாலைகளில் கைதிகள் அளவுக்கதிகமாக அடைக்கப்பட்டு மிருகங்களைப் போல நடத்தப்படும் நிலை இன்னும் மாறவில்லை. கைதிகளின் நெருக்கடியைக் குறைக்கத் நான் ஏற்கனவே பாராளுமன்றத்தில் முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளேன்.

விவசாயம், வர்த்தகம், வேலைவாய்ப்பு என அனைத்துத் துறைகளிலும் தற்போதைய அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. பல்வேறு பெரிய அளவிலான ஊழல்கள் நாட்டில் இடம்பெற்று வருகின்றன. தங்களால் நாட்டை ஆள முடியாது என்பதை உணர்ந்துள்ள அரசாங்கம், தற்போது அரசியல் எதிரிகளைச் சிறையில் அடைக்கும் வேலையை மட்டுமே செய்து வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து தற்போதைய நீதி அமைச்சர் வெறும் வார்த்தைகளால் பொறுப்பேற்காமல் பதவியிலிருந்து விலக வேண்டும்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்க்கட்சியிலிருந்தபோது ‘குழுக்கள் எதற்கு, குழுக்களைச் சாப்பிடவா?’ என்று கேட்டு நகைத்ததை இன்று அவருக்கே நினைவுபடுத்த விரும்புகின்றோம். அன்று அவர் பேசிய பேச்சுக்கள் அனைத்தும் இன்று அவருக்கே திரும்பி தாக்குகிறது.

அரசாங்கம் நீதித்துறையை அரசியல்மயமாக்கப் பார்க்கிறது. அதற்கு இடமளிக்காது நாட்டின் சுயாதீனத்தன்மையையும் சட்டத்தின் ஆதிக்கத்தையும் பாதுகாப்பதற்காக ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து கிராம மட்டத்திலான ஒரு பெரிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது என்றார்.