நீதி அமைச்சரை பதவி நீக்காமல் நீர்கொழும்பு சிறைச்சாலைச் சம்பவத்துக்கு நியாயமான விசாரணை சாத்தியமில்லை

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் விவகாரத்தில் அரசாங்கம் மிகவும் பொறுப்பற்ற முறையில் செயற்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, நீதி அமைச்சரைப் பதவியிலிருந்து நீக்காமல் இச்சம்பவம் குறித்து ஒருபோதும் நியாயமான விசாரணையை முன்னெடுக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சிறைச்சாலை நெரிசலைக் குறைப்பதற்கான மாற்றுத் திட்டங்களை விடுத்து, வரலாற்றுச் சிறப்புமிக்க போகம்பறை சிறைச்சாலை வளாகத்தை மீண்டும் சிறைச்சாலையாக மாற்றுவதற்கு அரசு எடுத்து வரும் தன்னிச்சையான நடவடிக்கைகள் மற்றும் தகுதியான அரச அதிகாரிகளின் முறையற்ற இடமாற்றங்கள் காரணமாக ஒட்டுமொத்த அரச பொறிமுறையும் பாரிய வீழ்ச்சியடைந்து வருவதாகவும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

சனிக்கிழமை (11) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக நாம் தீவிர அவதானம் செலுத்தியுள்ளோம். இந்த விடயத்தில் பொறுப்பற்ற முறையில் செயற்பட்ட நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வரவுள்ளோம். இந்த அரசாங்கம் நாட்டில் உள்ள சிறைச்சாலைகளை மூடிவிடுவதாகக் கூறித்தான் ஆட்சிக்கு வந்தது.

இவர்கள் எதிர்க்கட்சியில் இருந்தபோது இவ்வாறான விடயங்கள் குறித்துப் பாரியளவில் விமர்சித்து, வீதிகளில் இறங்கிப் போராட்டங்களை நடத்தினர்.  ஆனால், ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னர் மிகவும் பொறுப்பற்ற முறையில் செயற்படுகின்றனர். தங்களை ஒரு முன்மாதிரியான அரசாங்கம் என்று கூறிக்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கும் உயிரிழந்தவர்களுக்கும் அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் இன்று செயற்படுகின்றனர்.

இவற்றுக்கான தீர்வாக இவர்கள் புதிய சிறைச்சாலைகளை உருவாக்குவதைக் காண்கிறோம். ஒரு நாட்டின் கொள்கை என்பது சிறைச்சாலைகளைக் குறைத்து, பாடசாலைகளை அதிகரிப்பதாகவே இருக்க வேண்டும். சிறைச்சாலைகளில் உள்ள நெரிசலைக் குறைக்க வேண்டும் என்பதை நாமும் ஏற்றுக்கொள்கிறோம்; ஆனால், அதற்கு கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கக்கூடிய மாற்று சட்டங்கள், கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டங்களை உருவாக்குவதே சரியான தீர்வாகும்.

போகம்பறை சிறைச்சாலையை மீண்டும் ஒரு சிறைச்சாலையாக மாற்றுவதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து நான் மிகவும் கவலையடைகிறேன்.  நான் பிரதி அமைச்சராக இருந்தபோது, அப்போதைய அமைச்சர் மலிக் சமரவிக்ரமவுடன் இணைந்து, அந்த சிறைச்சாலை வளாகத்தை இலங்கை முதலீட்டுச் சபையின் கீழ் கொண்டு வந்தோம். கண்டி நகரின் மத்தியில் மிகவும் அழகான மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சூழலில் அது அமைந்துள்ளது.

அதன் முன்பகுதியை பெருமளவிலான பணத்தைச் செலவழித்து முதலீட்டுச் சபையின் மூலம் மிகவும் அழகாக மாற்றியமைத்தோம். அதன் மையப்பகுதியில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதற்கான முதலீட்டாளர்களைத் தேடிக்கொண்டிருந்த நிலையில்தான் 2020இல் எமக்கு ஆட்சி அதிகாரம் இல்லாது போனது. கண்டி நகரின் மையப்பகுதியில் உள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தை, சிறைச்சாலையை விடவும் நாட்டிற்குப் பொருத்தமான ஒரு சிறந்த திட்டத்திற்குப் பயன்படுத்துவதே அன்றைய எமது நோக்கமாக இருந்தது.

ஆனால், இவர்கள் இப்போது பழைய போகம்பறை சிறைச்சாலையை மீண்டும் ஒரு சிறைச்சாலையாகவே பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சிறைச்சாலைகளை அதிகரிப்பதுதான் இவர்களது கொள்கையா? இவர்களது கொள்கை சிறைச்சாலைகளின் நெரிசலைக் குறைப்பதாகவே இருக்க வேண்டும். நாட்டுக்கு பொருத்தமான, வணிக ரீதியான, சுற்றுலாப் பயணிகளையும் முதலீட்டாளர்களையும் ஈர்க்கக்கூடிய இடங்களை இவ்வாறான அபிவிருத்திகளுக்குப் பயன்படுத்த வேண்டும்; சிறைச்சாலைகள் தேவையென்றால் அதற்கு வேறு பொருத்தமான இடங்களைக் கண்டறிய முடியும். எனவே, இலங்கை முதலீட்டுச் சபையினால் உள்வாங்கப்பட்டு, பெருந்தொகை பணம் செலவழிக்கப்பட்டு புதிய முதலீட்டுக்காகத் தயார்படுத்தப்பட்ட பழைய போகம்பறை சிறைச்சாலையை மீண்டும் சிறைச்சாலையாக மாற்றுவதற்கு நான் எனது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்று மஹர சிறைச்சாலைச் சம்பவத்தின் போது நீங்கள் எவ்வாறு செயற்பட்டீர்களோ அதனை ஒரு முன்மாதிரியாகக் கொண்டு இந்த நீர்கொழும்பு சிறைச்சாலைச் சம்பவத்திலும் தலையிடுங்கள் என ஜனாதிபதியை வலியுறுத்துகின்றோம். நீதி அமைச்சரை பதவியிலிருந்து நீக்காமல் இந்த விவகாரம் குறித்து ஒரு நியாயமான விசாரணையை நடத்த முடியாது. சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஒருவரை நியமிப்பதற்குக் கூட இவர்களுக்கு ஒரு வருட காலம் எடுத்துள்ளது. எவ்வித காரணமும் இன்றி துஷார உபுல்தெனியவை அந்தப் பதவியிலிருந்து நீக்கினார்கள். அவருக்கு மீண்டும் அந்தப் பதவியை வழங்கி, நியாயத்தை நிலைநாட்டுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்து.

இவ்வாறான அற்பமான காரணங்களை முன்னிறுத்தித்தான் இவர்கள் அரச அதிகாரிகளைப் பதவிகளில் இருந்து நீக்குவதும், இடமாற்றம் செய்வதும் நடக்கிறது. இது சிறைச்சாலைத் துறையில் மட்டுமன்றி பல துறைகளிலும் நடந்து வருகிறது. இதன் காரணமாக ஒட்டுமொத்த அரச பொறிமுறையும் பாரியளவில் வீழ்ச்சியடைவதைக் காண்கிறோம். எனவே, ஜனாதிபதி இந்த நீர்கொழும்பு சிறைச்சாலைச் சம்பவம் குறித்து அரசாங்கத்தின் தீவிர அவதானத்தைச் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.