ஆசிரியர் வெற்றிடங்களுக்கு தனியார் பட்டதாரிகளை இணைக்க அரசாங்கம் முயற்சி – இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

கல்வித் துறையில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்குத் தனியார் நிறுவனங்களின் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் காரியாலயத்தில் சனிக்கிழமை (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போது கல்வித் துறையில் 40000 க்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுகின்றன. ஆனால் 23000 பேரையே சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அண்மையில் பாராளுமன்றத்தில் இது தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்ட போதிலும், கல்வியமைச்சர் மற்றும் பிரதி கல்வியமைச்சர் வழங்கிய பதில்களைப் பார்க்கும்போது எந்தவொரு பிரச்சினைக்கும் தெளிவான தீர்வு இல்லை என்பது தெளிவாகிறது.

இந்த 23000 என்ற எண்ணிக்கையை மட்டுமே சுழற்சி முறையில் குறிப்பிட்டு அவர்கள் பதிலளித்து வருகின்ற போதிலும், ஆசிரியர் வெற்றிடப் பிரச்சினைக்குச் சரியானதொரு தீர்வை வழங்குவதற்கு அரசாங்கத்திற்கு இன்னமும் முடிவதில்லை.

அதேபோன்று, கல்வியியல் பட்டதாரிகள் பெருமளவிலானோர் வெளியில் உள்ள நிலையில், அவர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வது தொடர்பில் கல்வியமைச்சரின் கூற்றுக்கள் முற்றாகவே ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக அமைந்துள்ளன.

ஆரம்பத்தில் தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசாங்கப் பல்கலைக்கழகங்களின் கல்வியியல் பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள முற்பட்டபோது கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. அதன்போது ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்றவர்களைக் குறிப்பிட்ட பதவிக்கு இணைத்துக் கொள்ள முடியும் என்ற பிரிவு காணப்படுவதாகவும், அதனைத் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வியமைச்சர் தெரிவித்திருந்தார்.

எனினும், கடந்த வாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், இரு தரப்பினருக்கும் அதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்ற ஆரம்பத்தில், தனியார் கல்வி நிறுவனங்களை ஊக்குவிப்பதில்லை என்றும் அரசாங்கப் பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கல்வியமைச்சர் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்.

ஆனால், தற்போது அந்த நிலைப்பாடுகள் அனைத்தும் தலைகீழாக மாற்றமடைந்துள்ளன. தற்போதைய ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பின் விதிகளுக்கமையவே இந்த நியமனங்கள் இடம்பெறும் என பாராளுமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்த ஆரம்பத்தில் ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பைத் திருத்துவோம் எனக் கூறிய கல்வியமைச்சர், தற்போது எதனடிப்படையில் இந்த நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார் என்பதே எமது கேள்வியாகும்.

அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் 4 வருடங்களுக்கும் மேலாகக் கல்வியியல் பட்டப்படிப்பை மேற்கொண்டு தகுதிபெற்ற பட்டதாரிகள் வெளியில் இருக்கும்போது, தனியார் நிறுவனங்களின் கல்வியியல் பட்டதாரிகளையும் சேவையில் இணைத்துக் கொள்வதற்கே பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இது முற்றிலும் தவறான கூற்றாகும் என்பதுடன், இச்செயற்பாட்டை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்றார்.

சமீபத்திய செய்திகள்