முழு நாடும் ஒன்றாக’ 9 மாதங்களில் 14 – 21 வயதுடைய சிறுவர்கள் 743 பேர் கைது

முழு நாடும் ஒன்றாக’ எனும் தேசிய நடவடிக்கைக்கமைய போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 14 முதல் 18 வயதிற்கு இடைப்பட்ட 743 சிறுவர்களும், 18 முதல் 21 வயதிற்கு இடைப்பட்ட 7,866 இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்தார்.

முழு நாடும் ஒன்றாக  வேலைத்திட்ட அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (31) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில், ‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய வேலைத்திட்டத்துக்கமைய 9 மாத கால முன்னேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் சட்டவிரோத சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கை தொடர்பான தகவல்களை வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘முழு நாடும் ஒன்றாக’ எனும் தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 9 மாதங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில், இதுவரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனைகளின் போது போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 2,39,384 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 995  பேர்  பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஆவர் மேலும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  அத்துடன், கைது செய்யப்பட்ட  378 பேருக்கு எதிராக  சட்டவிரோத சொத்து குவிப்புத் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும், நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கனஜத்து வெளிநாடு சென்று தலைமறைவாகியுள்ள 94 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  மேலும் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்  போது, 43,584 மில்லியன் ரூபா பெறுமதியான 2,253 கிலோகிராம் 834 கிராம் ஹெரோயின், 42,251 மில்லியன் ரூபா பெறுமதியான 2,640 கிலோகிராம் 695 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் 10,291 மில்லியன் ரூபா பெறுமதியான 293 கிலோகிராம் 732 கிராம் கொக்கைன் ஆகியவையும்  அதிகாரிகளால்  கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, இப்போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 14 முதல் 18 வயதிற்கு இடைப்பட்ட 743 சிறுவர்களும், 18 முதல் 21 வயதிற்கு இடைப்பட்ட 7,866 இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆகையால் இளம் தலைமுறையனரை போதைப்பொருளிலிருந்து மீட்பது அவசியம்.  பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் பேச்சு அல்லது நடத்தையில் ஏதேனும் மாற்றங்களை உணர்ந்தால் விழிப்புடன் செயற்பட வேண்டும். அத்துடன் தமது பிள்ளைகள் மாத்திரமன்றி, ஏனைய பிள்ளைகளின் நலன் குறித்தும் அக்கறையுடன் செயற்படுமாறு வலியுறுத்துகிறேன் என்றார்.