அம்பாறை, இகினியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்த கிராமத்தில் வெள்ளிக்கிழமை (31) மாலை பெய்த கனமழையின்போது மின்னல் தாக்கியதில் வீடு ஒன்று தீப்பிடித்து முற்றாக சேதமடைந்துள்ளது.
அவ்வீட்டில் உள்ள தந்தை கொழும்புக்குச் சென்றிருந்த நிலையில், தாய் அருகில் உள்ள தையல் நிலையமொன்றில் வேலை செய்துகொண்டிருந்துள்ளார்.
அத்துடன் மழை பெய்யத் தொடங்கியபோது வீட்டில் இருந்த இரண்டு பிள்ளைகளும் அயல்வீட்டுக்கு சென்றிருந்த நிலையில், வீட்டில் எவரும் இல்லாதபோதே மின்னல் தாக்கத்தால் வீடு சேதமடைந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
மின்னல் தாக்கத்தால் வீட்டின் உள்ளே பரவிய தீயை பிரதேசவாசிகள் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபோதிலும், வீட்டில் இருந்த அனைத்துப் பொருட்களும் உபகரணங்களும் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளன.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளில் இகினியகல பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.





