பிரான்சில் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த உதவ முன்வந்துள்ள நாடுகளுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் நன்றி
தென்மேற்கு பிரான்சில் கடந்த வாரம் பற்றியெரியத் துவங்கிய காட்டுத்தீ, சுமார் 42,000 ஹெக்டேர் பரப்பை கபளீகரம் செய்துவிட்டது.

இந்நிலையில், பிரான்சில் பற்றியெரியும் காட்டுத்தீயை அணைக்க அவுஸ்திரேலியாவும், லிதுவேனியாவும் முன்வந்துள்ளன.
அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சரான பென்னி வாங், பிரான்சுக்கு உதவியாக காட்டுத்தீயை அணைப்பதற்காக தீயணைப்பு வீரர்களையும், ஹெலிகொப்டர், தீயணைப்பு விமானம் உட்பட தீயணைப்பு கருவிகளையும் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
அதேபோல, லிதுவேனியா வெளியுறவு அமைச்சகம், பிரான்ஸ் காட்டுத்தீயை அணைப்பதற்காக, 32 தீயணைப்பு வீரர்களையும், 9 சிறப்பு வாகனங்களையும், 5 தீயணைப்பு வாகனங்களையும் அனுப்புவதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான், அவுஸ்திரேலியாவுக்கும், லிதுவேனியாவுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
சமூக ஊடகமான எக்ஸில் அவர் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், நன்றி, அவுஸ்திரேலியா என்றும், நன்றி, லிதுவேனியா என்றும் குறிப்பிட்டுள்ளார்.





