வலப்பனை மல்லியப்பூ தோட்ட அம்மன் ஆலய வளாகத்தில் புத்தர் சிலையை வைக்க இனந்தெரியாதோர் முயற்சி

வலப்பனை மல்லிகைப்பூ தோட்டத்தின் அம்மன் ஆலய வளாகத்தில்   வெள்ளிக்கிழமை  இரவு இனந்தெரியாதோரால் புத்தர் சிலையொன்று வைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டமையால் அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது.

வெள்ளிக்கிழமையன்று இரவு வெள்ளை நிற வேனில் வந்த குழுவினர் சிலர்  அப்பகுதியில் நீண்ட காலமாக இருந்து வந்த அம்மன் ஆலயத்தின் வளாகத்தில் புத்தர் சிலையை நிறுவுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் போது தகவல் அறிந்த பிரதேச இளைஞர்கள் அவ்விடத்துக்குச் சென்று சம்பவத்தை கையடக்கத் தொலைபேசி மூலம் பதிவு செய்துள்ளனர்.

வெள்ளை வேனின் உள்ளே புத்தர் சிலையொன்றும் இருந்துள்ளது. இதனிடையே முச்சக்கர வண்டிகள் மற்றும் வாகனங்களில் வந்த குழுவினர் சம்பவத்தை பதிவு செய்தவர்களுக்கு மிரட்டல் விடுத்ததுடன் என்ன வேண்டுமானால் செய்து கொள்ளுங்கள் நாம் பயமில்லை எனக் கூறியுள்ளனர். இதையடுத்து மேற்படி பகுதி மக்கள் இராகலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு உடனடியாகச் சென்று பொலிஸார் புத்தர் சிலை நிறுவும் முயற்சியை தடுத்து நிறுத்தியதுடன் மேற்படி குழுவினரை விசாரணை செய்துள்ளதுடன் அவர்களை அங்கிருந்து செல்லும்படி கூறியுள்ளனர். குறித்த பகுதியில் நூறு வருடங்களுக்கும் மேல் அம்மன் மற்றும் காவல் தெய்வ வழிபாடு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் திடீரென எங்கிருந்தோ வந்த சிலர் இவ்வாறு நடந்து கொள்வதாகவும் இது தமக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் மேற்படி தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.