தெண்டமானாற்றில் மீன்கள் இறந்து கரையொதுங்குவதனால், கடல் நீரை ஆற்று பக்கமாக திறந்து விடுமாறு வடமாகாண கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசத்தின் பிரதிநிதியான நகராசா வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
தொண்டமானாறு, ஆற்றில் பல மீன்கள் இறந்த நிலையில் அண்மைய நாட்களாக கரையொதுங்கி வருகிறது. இது தொடர்பில் தாம் கவனம் செலுத்திய போது ஆற்று நீர் வற்றியமையால், நீரில் உப்பின் செறிவு அதிகமானதால், தான் மீன்கள் இறக்கின்றன என தெரிவிக்கப்பட்டது.
அதனால், தொண்டைமானாற்றின் நன்னீர் தடுப்பணை வான் கதவுகளை திறந்து விட்டால் , கடல் நீர் உட்புகுந்து நீர் மட்டம் அதிகரித்தல் மீன்களை பாதுகாக்கலாம் என நீர்பாசன திணைக்களத்தை கோரினோம்.
அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். வான் கதவுகளை திறந்து, கடல் நீரை உள்ளே விட்டால், ஆற்றில் உப்பு செறிவு,மேலும் அதிகரிக்கும் என தெரிவித்தார்
ஆனால், மீன்கள் இறந்த மிதந்த நிலையில், பல்கலைக்கழக மாணவர் குழு ஒன்று ஆய்வு செய்த போது, ஆற்றின் உப்பு செறிவு தற்போது நீர் வற்றினால், கடலின் உப்பு செறிவை விட அதிகரித்துள்ளதாக கூறியுள்ளனர். அதனால் தான் வான் கதவுகளை திறந்து கடல் நீரை உள்ளே விட்டால், உப்பின் செறிவை கட்டுப்படுத்த முடியும், மீன்களை பாதுகாக்க முடியும் என கோருகிறோம்.
மீன்கள் அநியாயமாக இறக்கின்றன. இதனால் பல கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் அழிகிறது என நாம் கூறும் போது , மீன்கள் மேலும் இறக்க முதல், ஆற்றில் உள்ள மீன்களை பிடித்து விற்பனை செய்யுமாறு அவர்கள் எமக்கு ஆலோசனை கூறுகிறனர்.
எமக்கு அவர்களின் ஆலோசனைகள் தேவையில்லை. தொண்டைமானாற்றை அண்மித்த பகுதிகளில் உள்ள மூன்று கடற்தொழிலாளர் சங்கமும் இணைந்து , ஆற்றில் உள்ள மீன்களை எவ்வாறு பாதுகாக்கலாம் என கூடி ஆராய்ந்து சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புக்களை சந்தித்து, மீன்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரவுள்ளோம் என தெரிவித்தார்.





