அம்பாறை – நவகிரிஆறு வனப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அதிரடிச் சோதனையில், பெருமளவிலான சட்டவிரோத மதுபானம் மற்றும் மதுபானம் தயாரிப்தற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன் ஆணும் பெண்ணும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பக்கிஎல்ல பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, அதிகாலை 2:00 மணியளவில் இச்சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இச்சோதனையின் போது, 148 லீற்றர் கோடா, 7.5 லீற்றர் சட்டவிரோத மதுபானம் மற்றும் மதுபானம் காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்கள் என்பன பக்கிஎல்ல பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவ இடத்தில் தற்காலிகமாகக் கூடாரம் அமைத்துத் தங்கியிருந்த ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதுடன், பின்னர் அவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பக்கிஎல்ல பொலிஸார், எதிர்வரும் ஆகஸ்ட் 20 ஆம் திகதி அவர்களை அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.





