பொல்கொடை ஆற்றுக்கு அருகில் சட்டவிரோத மதுபான உற்பத்தி: இருவர் கைது!

பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்கொடை ஆற்றுக்கு அருகில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையமொன்றைக் கல்கிஸ்ஸை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முற்றுகையிட்டுள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமையவே இச்சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்த சோதனையின் போது 1,600 லீற்றர் கோடா (8 பீப்பாய்கள்), 135 லீற்றர் மதுபானம்  மற்றும் சட்டவிரோத மதுபானம் காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்துடன் தொடர்பில் தெலவல பகுதியைச் சேர்ந்த 56 மற்றும் 22 வயதுடைய இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, மேலதிக  நடவடிக்கைக்காகப் பிலியந்தலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பிலியந்தலை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.