அம்பாறை – மாவடிப்பள்ளி பிரதான வீதியில் ஒளிராத மின்விளக்குகள்! – அசௌகரியத்தில் மக்கள்

காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட அம்பாறை – மாவடிப்பள்ளி பிரதான வீதியில் அமைந்துள்ள மின்விளக்குகள் பல நாட்களாக ஒளிராத காரணத்தினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

தற்போது அம்பாறை மாவட்டத்தில் அடைமழை   பெய்துவரும் நிலையில் அப்பகுதி இருளில் முழ்கியிருப்பதால் வீதியில் செல்லும் வாகனங்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

அம்பாறை – காரைதீவு – மாவடிப்பள்ளி பிரதான வீதியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 6 மாணவர்கள் உட்பட 8 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

அத்துடன், இப்பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் காணப்படுவதனால் மாவடிப்பள்ளி பெரிய பாலம் முதல் காரைத்தீவு முச்சந்தி வரையிலுள்ள  பிரயாணிகள் அவலங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.

ஆனால், பெரிய பாலம் தொடக்கம் மாவடிப்பள்ளி சியாரம் வரையில் பொருத்தப்பட்ட மின்விளக்குகள் இரண்டு மணித்தியாலங்கள் தொடர்ந்து ஒளிர்ந்த பின் மீண்டும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு விளக்குகள் ஒளிராமல் போனதால் தொடர்ந்து பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன.

மழை அதிகரிக்கும்போது வீதி மூழ்கும்படியாக  வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதனால் பாம்பு,  முதலை, ஆமை போன்ற உயிரினங்களின் அச்சுறுத்தலும் அப்பகுதியில் ஏற்பட்டுள்ளது.

எனவே அவ்வீதியின் மின்விளக்குகள்  தொடர்ந்தும் ஒளிர்வதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அப்பிரதேச  மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.