சட்டவிரோதமாக கெப் வாகனத்தில் மாடுகளை கொண்டு சென்ற நால்வர் கைது

பதுளை, துன்ஹிந்த பிரதேசத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக மாடுகளை கெப் வாகனத்தில் கொண்டு சென்ற நான்கு சந்தேக நபர்கள் இன்று வியாழக்கிழமை (16) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை போக்குவரத்து பொலிஸ் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பதுளை, மஹியங்கனை பிரதேசத்தில் வசிக்கும் 30, 34, 35 மற்றும் 45 வயதுடையவர்கள் ஆவர்.

மஹியங்கனை – பதுளை வீதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பதுளை போக்குவரத்து பொலிஸ் பிரிவின் அதிகாரிகள் சிலர் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த கெப் வாகனம் ஒன்றை நிறுத்த முயன்றுள்ளனர்.

இதன்போது,கெப் வாகனத்தின் சாரதி பொலிஸ் உத்தரவையும் மீறி வாகனத்தை செலுத்திச் சென்றுள்ளார்.

பின்னர், பொலிஸ் அதிகாரிகள் சிலர் இணைந்து கெப் வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்றுள்ள நிலையில் பதுளை, துன்ஹிந்த பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

இதன்போது, கெப் வாகனத்திலிருந்து 06 மாடுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.