களுத்துறை தேவாலயத்தில் பெறுமதியான சிலைகள் திருட்டு

களுத்துறை, இங்கிரிய பிரதேசத்தில் உள்ள தேவாலயம் ஒன்றிலிருந்து பெறுமதியான சிலைகளை திருடியதாகக் கூறப்படும் முன்னாள் இராணுவ சிப்பாய் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

களுத்துறை, இங்கிரிய பிரதேசத்தில் உள்ள தேவாலயம் ஒன்றிலிருந்து பெறுமதியான சிலைகள் திருடப்பட்டுள்ளதாகக் கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி இங்கிரிய பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

இது தொடர்பில் களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் காலி பத்தேகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் காலி பத்தேகம மற்றும் கண்டி கம்பளை ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 39 மற்றும் 25 வயதுடையவர்கள் ஆவர்.

திருடப்பட்ட நான்கு சிலைகளும் சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.