சொரணத்தோட்ட பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட செரண்டிப் தோட்டத்திற்கு செல்லும் பாதையை சீரமைத்து தருமாறு தோட்ட மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
ஹாலி எலயில் இருந்து கந்தேகெதர செல்லும் வழியில் எத்தக்ம கிராமத்தின் பெளத்த விகாரைக்கு அருகில் இருந்து சுமார் 2 கிலோமீற்றர் வரையான பாதை மிகவும் மோசமான நிலையில் உள்ளதுடன் செரண்டிப் தோட்டத்தில் வசிக்கும் சுமார் 150 குடும்பங்கள் அன்றாடம் வாகனப் போக்குவரத்தை மேற்கொள்வதில் கடும் சிரமத்தினை எதிர்நோக்கி வருகின்றனர்.
நோயாளிகள், கர்ப்பிணித் தாய்மாரை அவசர நிலைமைகளின் போது பதுளை போதனா வைத்தியசாலைக்கு அழைத்து வருவதும் சவாலான விடயமாக இப்பகுதி மக்களுக்கு மாறியுள்ளது. இதன் காரணமாக முச்சக்கர வண்டிகளிலும் அதிக கட்டணம் அறவிடப்படுகின்றது.
செரண்டிப் தோட்டத்திற்கு செல்லும் உள் வீதியும் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக சுட்டிக்காட்டும் மக்கள் தமது அன்றாட தேவை, பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் என்பவற்றை கருத்திற் கொண்டு கிளின் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக உடனடியாகக் இப்பாதையை சீரமைத்து தரவேண்டும் என தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




