மலையக மக்கள் தொடர்பாக வழங்கிய வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும்

மலையக தோட்டத் தொழிலாளர்களது சம்பளப் பிரச்சினை உட்பட மலையக மக்கள் தொடர்பாக ஏற்கனவே அரசு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பாக கொட்டகலையில் இன்று செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் முதலாவது பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

மலையக மக்களின் பிரச்சினைகள் பற்றி முன்னர் பேசிய விடயங்களை தீர்ப்பதற்கு ஜனாதிபதி இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பள பிரச்சினையும் தீரவில்லை.

எனவே, இது தொடர்பான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் அல்லது எமது மக்களுக்கு இது பற்றி தெளிவுபடுத்தப்பட  வேண்டும்.

முன்பு இடம்பெற்ற கலவர காலத்தில் சுமார் 54 தேயிலைத் தொழிற்சாலைகளை அன்று ஜே.வி.பி.யினர்  எரித்ததாகக் கூறப்படுகிறது. பல உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இன்று பட்டலந்த ஆணைக்குழு பற்றி பேசப்படுகிறது.

ஏற்கனவே எரிக்கப்பட்ட தொழிற்சாலைகள் உட்பட அன்றைய கொடுமைகளுக்கு தீர்வு, நீதி பெற்றுத்தர ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும்.  அதாவது, மலையக மக்கள் பட்ட துன்பங்களுக்கு தீர்வு வழங்கவும் ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும்.

நாட்டில் போரின்போதும் ஜே.வி.பி. கலவரத்தின்போதும் தொற்று நோய்களால் நாடு முடக்கப்பட்டபோதும்  எமது மக்கள்தான் கொழுந்து பறித்து நாட்டுக்கு வருமானம் தேடித் தந்தனர்.

எனவே, எமது மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி பெரும்பான்மையை பெற்று வெற்றியடையும் என்றார்.

அதனையடுத்து, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் கூறுகையில்,

போலி வாக்குறுதிகளை வழங்கியே தேசிய மக்கள் சக்தி வாக்குகளைப் பறித்துள்ளது.

எனவே, இம்முறை ‘உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியே வெற்றி பெறும். மலையகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பெரும் பகுதி இந்தியா வழங்கிய நிதியாகும். நாளுக்கு நாள் பொருட்களின் விலைகள் அதிகரிக்கிறது.

தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் இல்லை. வரவு – செலவுத் திட்ட இறுதி உரையில் ஜனாதிபதி நீண்ட நேரம் உரையாற்றினாலும், தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் பற்றி எதுவும் கூறவில்லை என்றார்.