யாழ். பல்கலையில் பொன் சிவகுமாரனின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு

தமிழினத்தின் விடுதலைக்கான முதல் தற்கொடையாளர் தியாகி பொன்னுத்துரை சிவகுமாரனின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை (5) பகல் நடைபெற்ற இந்த நிகழ்வில், பொன் சிவகுமாரனின் திருவுருவப் படத்துக்கு மாணவர்கள் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.

பொன் சிவகுமாரன், தமிழ் மாணவர்களுக்கு தரப்படுத்தல் மூலம் திணிக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிராகவும், தமிழர்களின் உரிமைகளை மீட்பதற்காகவும் கிளர்ந்தெழுந்து ஆயுதம் ஏந்திப் போராடியவர் ஆவார். அதனால் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த இவர் 1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் திகதி யாழ். உரும்பிராய் பகுதியில் பொலிஸாரின் சுற்றிவளைப்பினுள் சிக்கிக்கொண்டபோது சயனைட் உட்கொண்டு தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.

ஈழ போராட்ட வரலாற்றில் முதல் முதலாக சயனைட் உட்கொண்டு உயிர் நீத்தவர் பொன் சிவகுமாரன் என்பது குறிப்பிடத்தக்கது.