தமிழரசுக்கட்சிக்குள் இருக்கும் சில தமிழ்த்தேசிய விரோத சக்திகளின் செயற்பாடுகள் எமக்கு பெரும் கவலையை ஏற்படுத்துகின்றன. இச்செயற்பாடுகள் எமது மக்களின் அபிலாஷைகளுக்கு எதிரானவையாக இருப்பதுடன் மாத்திரமன்றி, தமிழ் மக்களை சிங்களவர்களின் ஆதிக்கத்தின் கீழ் நிரந்தரமாக அடக்குவதற்கும் பங்களிக்கின்றது.
அதன்படி ஈழத்தமிழர்களின் அபிலாஷைகளை முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரியநேத்திரனை கட்சியிலிருந்து நீக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை மறுபரீசிலனை செய்யுமாறு வலியுறுத்துகிறோம் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் செயற்குழு உறுப்பினர்களுக்கு எழுதியிருக்கும் பகிரங்க கடிதத்தில் புலம்பெயர் தமிழர் அமைப்பான ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கைக்குழு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அவ்வமைப்பினால் வெளியிடப்பட்டிருக்கும் பகிரங்க கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
ஈழத்தமிழ் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மிகப்பெரிய பிரதான அரசியல் கட்சியாக உள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சி, எமது மக்களின் அரசியல் சுதந்திரத்தையும், விடுதலையையும், உரிமையையும் நோக்கி சகலரையும் வழிநடத்தவேண்டிய பொறுப்புவாய்ந்த நிலையில் இருக்கின்றது.
ஆனால் கட்சியின் சமீபத்திய தீர்மானங்களும், செயற்பாடுகளும் எமக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்களின் உணர்வையும், அபிலாஷைகளையும் பிரதிபலிக்கவேண்டிய இலங்கைத் தமிழரசுக்கட்சி, எமது பிரச்சினைகளை சர்வதேச அரங்குக்குக் கொண்டுசெல்வதற்கான முக்கிய வாய்ப்புக்களைத் தவறவிட்டதுடன் மாத்திரமன்றி, எமது மக்களின் உண்மையான அபிலாஷைகளைப் பிரதிநிதித்துவப்படுத்த முயன்றவர்களைக்கூட தண்டித்ததாகவே தோன்றுகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் இணைந்து ஈழத்தமிழர்களின் அபிலாஷைகளை உலகுக்குக் காண்பிப்பதற்காக அரியநேத்திரனை தமிழ் பொதுவேட்பாளராகக் களமிறக்கினர். அவர் 226,343 வாக்குகளைப் பெற்று ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்தினார்.
அதனைத்தொடர்ந்து நடைபெற்ற பொதுத்தேர்தலில் 257,813 வாக்குகளைப்பெற்ற இலங்கைத் தமிழரசுக்கட்சி, பாராளுமன்றத்தில் 8 ஆசனங்களைக் கையகப்படுத்தியது. இரண்டு தேர்தல்களிலும் தமிழர்கள் சார்பாக இருதரப்பினருக்கும் கிடைக்கப்பெற்ற வாக்குகள் ஏறத்தாழ சமனாகவே இருக்கின்றது. இம்முடிவுகள் தமிழ் மக்களின் அரசியல் தீர்மானத்தையும், வலிமையையும் பிரதிபலிக்கின்றன.
இருப்பினும் ஈழத்தமிழர்களின் அபிலாஷைகளை முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரியநேத்திரனை தமிழரசுக்கட்சியிலிருந்து நீக்கியிருப்பதாக நாம் அறிகின்றோம். தமிழ் மக்களால் அவருக்கு வழங்கப்பட்ட ஆணையையும், அங்கீகாரத்தையும் கருத்திற்கொண்டு இத்தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இலங்கைத் தமிழரசுக்கட்சிக்குள் இருக்கும் சில தமிழ்த்தேசிய விரோத சக்திகளின் செயற்பாடுகள் எமக்கு பெரும் கவலையை ஏற்படுத்துகின்றன. இச்செயற்பாடுகள் எமது மக்களின் அபிலாஷைகளுக்கு எதிரானவையாக இருப்பதுடன் மாத்திரமன்றி, தமிழ் மக்களை சிங்களவர்களின் ஆதிக்கத்தின்கீழ் நிரந்தரமாக அடக்குவதற்கும் பங்களிக்கின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த தேர்தல்களில் எமது மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி மதிப்பளிக்கவேண்டும் என விரும்புகிறோம்.
எமது மக்களின் ஆணையையும், அங்கீகாரத்தையும் பெற்றவர்களை நீக்குவதும், எமது மக்களால் நிராகரிக்கப்பட்ட நபர்களுக்கு புதிய பதவிகளை உருவாக்கி வழங்குவதும் எம்மால் பெரிதும் மதிக்கப்படுகின்ற கட்சியின் எதிர்காலத்துக்கும், எமது மக்களின் எதிர்காலத்துக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆகவே மேற்குறிப்பிட்ட தீர்மானத்தை மீள்பரிசீலனைக்கு உட்படுத்துமாறு வலியுறுத்துகிறோம் என அந்தப் பகிரங்கக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.




