இன, மத மனங்களையும் சுத்தப்படுத்துவதான் கிளின் சிறிலங்காவின் நோக்கம்!-சந்திரசேகர்

‘கிளின் சிறிலங்கா’ என்பது இன, மத மனங்களையும் சுத்தப்படுத்துவது தான் நோக்கம் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

தேசிய தைப்பொங்கல் விழா வெள்ளிக்கிழமை (17) தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்று பின்னர் யூனியன் கல்லுரியில் அரங்க நிகழ்வுகள் நடைபெற்றன. அங்கு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இனங்களுக்கிடையில் ஒற்றுமையை, அன்பை, பாசத்தை ஏற்படுத்துகின்ற நிகழ்வுகள் பேச்சளவில் மாத்திரம் நிகழ்ந்திருக்கிறதே தவிர யதார்த்தபூர்வமாக நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்றார்கள். ஆனால் தை பிறந்தால் வழி பிறந்ததா என்பதை தேடிப் பார்த்தால் எங்கள் நாட்டில் தை பிறந்தால் என்ன நடந்திருக்கும் தாட்டில் மாற்றம் எற்பட்டதா சிறுவர்களுக்கு மகிழ்சி ஏற்படுத்தப்பட்டதா என்று தேடி பார்த்தால் எதுவுமே இல்லை.

இந்த வருட தை பிறப்பு என்பது 75 வருடங்களுக்கு பிறகு நாங்கள் நீங்கள் எல்லோருமே கூட்டிணைந்து புதிய அரசாங்கத்தை உருவாக்கியிருக்கின்ற நிலையில் நடைபெறுகின்றது. முதலில் எங்களுக்கு வழங்கிய ஆணைக்கு தலைவணங்கி நன்றி கூறுகின்றோம்.

நீங்கள் வழங்கிய மாற்றத்துக்கான ஆணையூடாக மாற்றத்தை ஏற்படுத்துவோம். எந்தவிதமான பந்தாக்களும் இல்லாமல் தான் நாங்கள் உங்களிடம் வந்துள்ளோம்.

கிளின் சிறிலங்கா என்பது நாட்டையோ வீட்டையோ கிராமத்தையோ சுத்தப்படுத்துவதல்ல. எங்களுடைய இனம், மத மனங்களை சுத்தப்படுத்துவது தான் முதலாவது விடயமாகின்றது. சிதைந்து போயுள்ள மனங்களை சுத்தப்படுத்துவது தான் கிளின் சிறிலங்காவின் நோக்கம்.

இந்தப் பொங்கலிலிருந்து புதிய பாதையில் பயணிப்போம் என்பது எனது வேண்டுகோளாகும். அரசாங்கம் புதிய பாதையில் பயணிக்கிறது. ஜனாதிபதி புதிய உலகத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

இந்தப் பாதையில் நாங்கள் மாத்திரமல்ல. நீங்களும் பயணிக்க வேண்டும். உங்களைத் தான் நாங்கள் நம்பியிருக்கின்றோம். நீங்கள், நாங்கள் இணைந்து நாசமாக்கப்பட்டுள்ள இந்த நாட்டை முன்னேற்ற வேண்டும். அதற்காக அனைவரும் அணிதிரள வேண்டும் என்றார்.