‘பாதுகாப்பு படைகளின் பதவி நிலைப் பிரதானி’ பதவி இனி இல்லை – பாதுகாப்பு செயலாளர்

பாதுகாப்பு படைகளின் பதவி நிலைப் பிரதானி பதவிக்கு ஒரு நியமனத்தை வழங்க எதிர்பார்க்கவில்லை. அந்த பணி தொடர்பான பொறுப்புக்களை முன்னெடுப்பதற்கான இயலுமைய தமக்கிருப்பதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற எயா வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் புதன்கிழமை (29) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பாதுகாப்பு படைகளின் பதவி நிலைப் பிரதானி பதவியைத் தொடர்ந்தும் வைத்திருப்பதற்கு நாம் எதிர்பார்க்கவில்லை. அந்த பணி தொடர்பான பொறுப்புக்களை பாதுகாப்பு அமைச்சின் மூலம் முன்னெடுப்பதற்கான இயலுமை காணப்படுகிறது. தேவை ஏற்படின் அந்த பதவிக்கான நியமனத்தை வழங்க முடியும். எவ்வாறிருப்பினும் தற்போது பாதுகாப்பு படைகளின் பதவி நிலைப் பிரதானியொருவரை நியமிப்பதற்கு எவ்வித தீர்மானமும் இல்லை என்றார்.

கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் திகதி முதல் 2022 மே 31 வரை ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத்தளதியாக பணியாற்றினார். அதன் பின்னர் தனது பதவி காலம் நிறைவடைய 2022 ஜூன் முதலாம் திகதி பாதுகாப்பு படைகளின் பதவிநிலை பிரதானியாக நியமிக்கப்பட்டார். கடந்த டிசம்பருடன் அவரது பதவி காலம் நிறைவடைந்து அவர் ஓய்வு பெற்றார். எனினும் அந்த பதவிக்கு அதன் பின்னர் யாரும் நியமிக்கப்படவில்லை. இந்நிலையிலேயே பாதுகாப்பு செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.