கம்பளை – தவுலகல பகுதியில் பாடசாலை மாணவி கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்றையதினம் கம்பளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
கடத்தப்பட்ட மாணவியும் இதன்போது நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
கம்பளை, தவுலகல பகுதியில் வைத்து கடத்தப்பட்ட பாடசாலை மாணவியையும், அவரை கடத்திய சந்தேக நபரையும் நேற்று(13) இரவு அம்பாறை பொலிஸ் அதிகாரிகள் தவுலகல பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதேவேளை, பொலிஸ் நிலையத்திற்கு வருகைத் தந்த கடத்தப்பட்டதாகக் கூறப்படும் மாணவியின் தந்தை, இந்தக் கடத்தல் சம்பவம் பணம் பறிக்கும் நோக்கத்திற்காக மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது மகளுக்கும், அவரை கடத்திய சந்தேகநபருக்கும் இடையில் காதல் உறவு எதுவும் இல்லை எனவும், தனது மகளைக் கடத்திய சந்தேக நபர் தனது மருமகன் என்றும், ஆனால் ஏனைய இருவரைப் பற்றி தனக்குத் தெரியாது என்றும் இதன்போது குறித்த தந்தை தெரிவித்துள்ளார்.



