கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் வெளியான தகவல்!

கொழும்பு, கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட  பெனடிக்  மாவத்தை பகுதியில் திங்கட்கிழமை  (10) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

பெனடிக்  மாவத்தை பகுதிக்கு நேற்றைய தினம் இரவு 07.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர், வீதியிலிருந்த நபரொருவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு 13, ஜம்பட்டா வீதியில் வசித்து வந்த 43 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சந்தேக நபர்கள் இருவரும் T-56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பெனடிக்ட்  மாவத்தை பகுதியில் உள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூடு, பாதாள உலக கும்பலின் தலைவரான “பலனி ஷிரான் குலோரியன் ” என்பவரின் சகாக்களால் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருமான “புகுடுகன்னா”பாலசந்துன் புஷ்பராஜ் ஹேவத் என்பவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.