கொஹுவலையில் ஹெரோயின், கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

கொஹுவலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களுபோவில பிரதேசத்தில் ஹெரோயின் மற்றும் கேரள கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் பெண் உட்பட மூவர் இன்று வியாழக்கிழமை (16) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.

பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பணிப்புரைக்கு அமைய நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுபோவில பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடைய இளைஞனும் 54 வயதுடைய பெண்ணொருவரும் வெல்லம்பிட்டி பிரதேசத்தில் வசிக்கும் 56 வயதுடைய நபரொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து ஒரு கிலோ 594 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் , 04 கிலோ கிராம் கேரள கஞ்சா போதைப்பொருள் மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பன  கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் இன்றைய தினம் கல்கிசை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.