சிறிலங்கா காவல் துறை கான்ஸ்டபிள் துப்பாக்கியுடன் மாயம்

கல்கிசை சிறிலங்கா காவல் துறை நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் துப்பாக்கி மற்றும் பல தோட்டாக்களுடன் காணாமல் போயுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளதாவது,

பொலிஸ் கான்ஸ்டபிள்  நேற்று சனிக்கிழமை (08) இரவு வீதி சோதனை நடவடிக்கைக்காக சென்றபோது மேற்படி துப்பாக்கியையும் 30 தோட்டாக்களையும் தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளார்.

இருப்பினும், சம்பந்தப்பட்ட அதிகாரி வீதி சோதனை நடவடிக்கைக்கு சமூகமளிக்காததால், அவரைத் தொடர்பு கொண்டபோது அவரது கையடக்க தொலைபேசி நிறுத்தப்பட்டுள்ளது.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில், சந்தேக நபர் நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து டுபாய்க்கு சென்றுள்ளமை தெரியவந்தது.

அதன்படி, சந்தேகத்திற்குரிய பொலிஸ் அதிகாரியை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு சர்வதேச பொலிஸ் மூலம் தேவையான நடவடிக்கைகளை தற்போது எடுக்கப்பட்டுள்ளது.

அவர் வைத்திருந்த துப்பாக்கி இன்னும் மீட்கப்படவில்லை, மேலும் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.