சுகாதார ஊழியர்கள் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்குவதுடன், பரஸ்பர புரிந்துணர்வுடன் அவர்களுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் வேலை நிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் இன்றி சேவையை முதன்மைப்படுத்தும் சூழலை நாட்டில் உருவாக்க முடியும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
சுகாதார தொழிற்சங்கங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் சகல சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் சுகாதார அமைச்சு வளாகத்தில் அண்மையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுகாதார சேவையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் தமது சேவைத் தொடர்பில் நல்ல புரிந்துணர்வுடன் அவற்றை பொறுப்பான முறையில் நிறைவேற்றி வருகின்றனர். இது பாராட்டத்தக்க விடயமாகும். ஆகையால் சுகாதார ஊழியர்கள் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்குவதுடன், பரஸ்பர புரிந்துணர்வுடன் அவர்களுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் வேலை நிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் இன்றி சேவையை முதன்மைப்படுத்தும் சூழலை நாட்டில் உருவாக்க முடியும்.
அதற்கு அவசியமான சுகாதார அமைச்சால் முன்னெடுக்க வேண்டிய சட்ட ரீதியான மற்றும் நியாயமான நடவடிக்கைகளை எடுக்க ஒருபோதும் தயங்கமாட்டேன். சுகாதார சேவையில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்களின் அளப்பரிய அர்ப்பணிப்பு மற்றும் முயற்சியினால் மலேரியா, பரவா, புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் மஞ்சள் காமாலை, போலியோ, தாயிடமிருந்து குழந்தைக்கு பரவும் எச் ஐ வி போன்ற நோய்களை ஒழிக்கவும் கட்டுபடுத்தவும் முடிந்துள்ளது.
தற்போது நாட்டில் உள்ள இலவச சுகாதார சேவையானது வளர்ச்சியடைந்த நாடுகளில் வழங்கப்படும் சுகாதார சேவைக்கு இணையாக உள்ளது. இவ்வாறு உயர் தரமான சேவையை வழங்குவதற்கான பின்னணியை உருவாக்கியுள்ள நாட்டில் உள்ள அனைத்து அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.




