சுகாதார சேவையின் உயர்வுக்காக அர்பணிப்புடன் கடமையாற்றும் ஊழியர்களின் தேவைகளை உணர்ந்து அவர்களை திருப்திபடுத்துவதன் மூலம், இந்நாட்டு மக்களுக்கு உயர்தரமான சுகாதார சேவையை எவ்வித தடையுமின்றி தொடர்ச்சியாக வழங்க முடியும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
சுகாதார சேவையில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களுடனும் அண்மையில் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, சுகாதார சேவையில் உள்ள ஊளியர்கள் எதிர்நோக்கும் தொழில்சார் பிரச்சினைகள் ஆராய்ந்த பின்னர் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
இந்நாட்டில் நடைமுறையில் உள்ள இலவச சுகாதார சேவை கட்டமைப்பில் தமது கடமைகளை உரியவாறு நிறைவேற்றி வரும் சுகாதார ஊழியர்கள் சமீபகாலமாக எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதுடன், அவர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் தொழில் புரிவதற்கு ஏற்ற சூழலை அமைத்துக் கொடுப்பதும் சுகாதார அமைச்சின் பிரதான நோக்கமாகும்.
சுகாதார சேவை ஊழியர்களின் தேவைகளை உணர்ந்து அவர்களை திருப்திபடுத்துவதன் மூலம், இந்நாட்டு மக்களுக்கு உயர்தரமான சுகாதார சேவையை எவ்வித தடையுமின்றி தொடர்ச்சியாக வழங்க முடியும் என சுகாதார அமைச்சு எதிர்பார்க்கின்றது.
சுகாதார சேவை உள்ள சகல ஊழியர்களும் தமது கடமை தொடர்பில் நல்ல புரிதல் உள்ளமையால் தமது பொறுப்புகளை உரியவாறு நிறைவேற்றி வருகின்றனர்.
ஆகையால் தொழிற்சங்கங்களுடன் பரஸ்பர புரிந்துணர்வுடன் செயற்படுவதன் மூலம் பணிப்புறக்கணிப்பு உள்ளிட்ட தொழிற்சங்க போராட்டங்களை குறைத்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுள்ளது.
சுகாதார அமைச்சுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான உறவு, நல்லிணக்கம் மற்றும் நட்பை வலுப்படுத்துவதே இவ்வாறான கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாகும்.
இலங்கை மக்களுக்கு தரமான மற்றும் உகந்த சுகாதார சேவைகளை வழங்குவதற்காக தற்போதைய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள புதிய வேலைத்திட்டத்துக்கு அனைத்து தொழிற்சங்கங்களும் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.




