மின்சார சபையின் பொறியியலாளர் சங்கமே பிரதான மின் மாபியாக்கள்

மின்சார சபையில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  ஊழியர்கள் பணிபுரிகின்ற நிலையில், 50 சதவீதமான பணிகள் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது. ஆனால் மின்சார சபை பொறியியலாளர்கள் இலட்சக்கணக்கில் சம்பளம் பெறுகிறார்கள். மின்சார பொறியியலாளர்  சங்கமே பிரதான மின்மாபியாவாக செயற்படுகிறது இவர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்னவென்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்  ஹேஷா  விதானகே  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (06) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்களுக்கான வேளையின் போது மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்.

மின்சார சபை தொடர்பில்  வாய்மூல விடைக்கான வினாக்களின் போது முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு மின்சாரத்துறை அமைச்சர் குமார ஜயகொடி வருமாறு பதிலளித்தார்,

இலங்கை மின்சார சபையில்  22,135  நிரந்தர ஊழியர்களும், ஒப்பந்த அடிப்படையில் 95 ஊழியர்களும்,  தற்காலிக  அடிப்படையில்  150 ஊழியர்களும்,  என்.வி.க்யூ பயிற்சி அடிப்படையில் 25 ஊழியர்களும், சக்தி வலு நிறுவனத்தின் 56 ஊழியர்களும்  பணிபுரிகிறார்கள்.

மின்கம்பிகளை இழுத்தல், குழிகளைத் தோண்டுதல் மற்றும் மின் இணைப்பைத் துண்டித்தல் போன்ற பணிகள் ஒப்பந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. செலவுகளை குறைப்பதற்காகவே இந்த பணிகள் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன.

மின்சார சபையில் பல  குறைப்பாடுகள் மற்றும் சிக்கல்கள் காணப்படுவதை ஏற்றுக் கொள்கிறோம். மின் விளக்கை ஒளிரச் செய்து, அணைப்பதை போன்று இந்த பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு காண முடியாது. ஏனெனில் சேவையாளர்களுடன் இந்த பிரச்சினைகள்  தொடர்புப்பட்டுள்ளது.  ஆகவே கட்டம் கட்டமாகவே தீர்வு காண்பதற்கு  நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.

இதனைத் தொடர்ந்து எழுந்து மேலதிக கேள்விகளை முன்வைத்த  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்  ஹேஷா  விதானகே  ,   இலங்கை மின்சார சபை ஊழியர்களின் சம்பள வேதனாதிகளுக்காக வருடாந்தம் 5 ஆயிரம் கோடி ரூபா ஒதுக்கப்படுகிறது. மின்சார சபையில்  பாரிய மாபியாக்கள் உள்ளன. அவற்றில் மின்சார பொறியியலாளர் சங்கம்  பிரதான மாபியா என்று குறிப்பிட வேண்டும்.

மின்சார சபையில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  ஊழியர்கள் பணிபுரிகின்ற நிலையில், 50 சதவீதமான பணிகள் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது. ஆனால் சம்பளம் மாத்திரம் இலட்சக்கணக்கில் சபையின் ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. மின்சார சபையின் பொறியியலாளரின் மாத சம்பளம் எவ்வளவு ?

மின்சார சபையில் பல மாபியாக்கள் உள்ளன யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல தீவுகள் உள்ள  நிலையில் அங்கு எரிபொருள் ஊடான மின்சாரமே விநியோகிக்கப்படுகிறது. அப்பகுதியில் சூரிய மின்னுற்பத்தி ஊடாக மின்சாரத்தை  உற்பத்தி  முடியும்.  ஆகவே மின்சார சபையின் முறையற்ற செயற்பாடுகள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் என்னவென்று கேள்வியெழுப்பினார்.

இதற்கு எழுந்து பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர், மின்சார சபையில் குறைப்பாடுகள் இருப்பதை ஏற்றுக்கொள்கிறோம்.இது இன்று நேற்று இடம்பெற்றதல்ல, காலம் காலமாகவே இடம்பெறுகிறது. அரசியல் தலையீடுகளுடன் கடந்த காலங்களில் தீர்மானங்கள் வழங்கப்பட்டுள்ளன. அரசியல் பரிந்துரைகளுடன் நியமனங்கள்.

தகுதியில்லாதவர்கள் பலர் அரசியல்வாதிகளின் பரிந்துரையுடன்  சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள். இதுவும் பிறிதொரு பிரச்சினையாக காணப்படுகிறது. மின்சார சபையின் மறுசீரமைப்புக்களை எதிர்வரும் 6 மாத காலத்துக்குள் நிறைவு செய்யப்படும். பிரச்சினைகளுக்கு கட்டம் கட்டமாக தீர்வு காணப்படும் என்றார்.