வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி ; சந்தேக நபர் கைது

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி கோடிக்கணக்கான ரூபா பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபரொருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) தலாத்து ஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பதிவு செய்யப்படாத வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வந்துள்ள நிலையில் வெவ்வேறு பெயர்களில் தம்மை அடையாளப்படுத்தி, வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபா மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது,

மயிலப்பிட்டய பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சந்தேக நபரை கடந்த 21ஆம் திகதி கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் இத்தாலி மற்றும் ருமேனியா போன்ற நாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பல்வேறு பிரதேசங்களில் உள்ள இளைஞர்களை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகளின் போது சுமார் ஒரு மாத காலத்தில் 90 இலட்சம் ரூபா பணத்தைச் சந்தேக நபரது வங்கிக் கணக்கில் பலர் வைப்பில் இட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

மயிலப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள சந்தேக நபரது வீட்டில் மேற்கொண்ட சோதனையின் போது சுமார் மூன்றரை இலட்சம் ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளது.

இது தவிர மேலும் பல போலி ஆவணங்கள், இறப்பர் முத்திரைகள் மோட்டார் வாகன பதிவாளர் காரியாலயத்தின் பெயர் பொருத்தப்பட்ட போலி ஆவணங்கள் உட்பட பலவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

மேலும், சந்தேக நபர் இதற்கு முன்னர் சிலாபம், தியத்தலாவை போன்ற இடங்களில் வசித்துள்ளதாகவும், எம்பிலிப்பிட்டிய மற்றும் அம்பாந்தோட்டை, பிலியந்தலை ஆகிய இடங்களில் வசிக்கும் பல்வேறு நபர்களுடன் இணைந்து  பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.