30 ஆண்டுகளாக சிறையில் அரசியல் கைதியாக இருக்கும் எனது அண்ணனை விடுவியுங்கள்

30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அரசியல் கைதியான எனது அண்ணனை விடுவியுங்கள் என  விக்னேஸ்வரநாதன் பார்த்திபனின் சகோதரி வாகினி  ஜனாதிபதி அனுரவிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எங்களுடைய அண்ணாவிற்கு விடுதலை கிடைத்துவிடும் என்று கடந்த 30 ஆண்டுகளாக நாங்கள் பல ஜனாதிபதிகளிடம் முறையிட்டும் எந்த விதமான தீர்வுகளும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

தற்போதய ஜனாதிபதி அனுர யாழ்ப்பாணம் வருகை தந்த போது அவருக்கும் கடிதம் கொடுத்துள்ளேன்.

அதற்கான பதில் எனக்கு கடிதம் கிடைத்தது என்று மாத்திரமே வந்தது.

ஜனாதிபதி அனுர எதிர்வரும் 31ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகின்றார் அவர்வருகைதரும் குறித்த 31ஆம் திகதியுடன் எனது அண்ணா கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகள் பூர்த்தி ஆகின்றது.

கடந்த 30 ஆண்டுகளாக எங்களுடைய அண்ணாவுக்கும் மன்னிப்பு கிடைக்கவில்லை.

இந்த முறை சுதந்திர தினத்தில் என்றாலும் அவரை விடுதலைசெய்து அண்ணாவை எங்களுடன் சுதந்திரமாக வாழவிடுங்கள்.

நாங்கள் எங்களுடைய குடும்பம் சார்பில் உங்களை கும்பிட்டு கேட்கின்றோம்.

நீங்கள் என்றாலும் என்னுடைய அண்ணாக்கு பொது மன்னிப்பளித்து விடுதலை செய்யுங்கள்.

30 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து எங்களுடைய அண்ணாவுக்கு தற்போது 50 வயதாக போன்றது.

இனியும் அவரை சிறையில் வைத்து இருக்காதீர்கள், சிறையில் வைத்திருந்து என்ன செய்யப் போகிறீர்கள்.

எங்களுடைய அண்ணா விடுவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்புடன் எங்களுடைய குடும்பம் காத்திருக்கின்றது.

நான் இறுதியாக ஜனாதிபதி அனுரவின கூட்டத்தில் கலந்து கொண்டபோதும் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று கூறியிருந்தார்.

அதை நம்பியே நாங்களும் இருக்கின்றோம்.

எங்களுடைய அண்ணா 50 வயதை தாண்டியும் இனியும் வைத்திருந்து என்ன செய்யப் போகிறீர்கள்? நீங்கள் கூறியதை நிறைவேற்றுவீர்கள் என நாங்கள் உங்களை நம்பியிருக்கின்றோம்.

கடந்த காலங்களில் வந்த ஜனாதிபதிகள் எவரும் நமக்கான நீதியைப் பெற்றுத்தரவில்லை.

நீங்கள் இந்த சுதந்திர தினத்தில் பொது மன்னிப்பளித்து எங்களுடைய அண்ணாவிற்கு சுதந்திரத்தினை கொடுங்கள் என்று நாங்கள் உங்களை மன்றாடிக் கேட்கின்றோம் என்றார்.