கல்கிஸை துப்பாக்கிப்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது

கல்கிஸை துப்பாக்கிப்பிரயோகத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்  மேல் மாகாண தெற்கு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன்  அவர்  இராணுவத்திலிருந்து விலகியவரென விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்ரீபால மாவத்தை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் படோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை இலக்கு வைத்து கடந்த 19 ஆம் திகதி துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், மேல் மாகாண தெற்கு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்தது. இதற்கமைய வெள்ளிக்கிழமை (24) பியகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இந்த துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்ட துப்பாக்கிதாரி விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் 33 வயதுடைய மொரவெவ தெற்கு, பங்குளம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதோடு அவர் 2012 ஆம் ஆண்டு பொது மன்னிப்பு காலப்பகுதியில் சட்டரீதியாக இராணுவத்திலிருந்து விலகியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த துப்பாக்கிப்பிரயோகம் வெளிநாட்டில் தலைமறைவாகி நாட்டினுள் திட்டமிட்ட மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவரின் வழிகாட்டுதடுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் கல்கிஸ்ஸை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேல்மாகாண தெற்கு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு முன்னெடுத்துள்ளது.