கிளிநொச்சியில் உயிரிழந்த பன்றிகளின் உடலை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதிமன்று உத்தரவு

கிளிநொச்சியில் தனியார் பன்றிப் பண்ணை ஒன்றில் நோய் தொற்று காரணமாக உயிரிழந்த பன்றிகளின் உடலை  மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தி  மன்றுக்கு அறிக்கை  இடுமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பன்றி வளர்ப்பு பண்ணையில் திடீரென கடந்த சனிக்கிழமை (01) ம் திகதியும் ஞாயிற்றுக்கிழமை (02)ம் தொடர்ச்சியாக 50க்கும் மேற்பட்ட பன்றிகள் உயிரிழந்துள்ளன.

இந்நிலையில்,  குறித்த பண்ணையிலிருந்து ஒரு  தொகுதி பன்றிகளை நேற்று ஞாயிற்றுக்கிழமை (02)  வேறு ஒரு பண்ணைக்கு  மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட சமயம் கால்நடை வைத்திய அதிகாரியினால் குறித்த பண்ணையாருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் குறித்த வழக்கானது நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) கிளிநொச்சி மாவட்ட நீதிவான்  நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது  உயிரிழந்த பன்றியின் மாதிரிகளை பெற்று மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்குமாறு மன்று கட்டளையிட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த பண்ணையில் உயிரிழந்த பன்றியின் மாதிரிகள் உயிருடனுள்ள ஏனைய பன்றிகளின் இரத்த மாதிரிகள் பெறப்பட்டு பேராதனையில் உள்ள மிருக வைத்திய ஆராய்ச்சி பிரிவுக்கு அனுப்பி  வைக்கவுள்ளதாவும்   கால்நடை வைத்திய அதிகாரி  தெரிவித்துள்ளார்.