தொலைபேசிகளை கொள்வனவு செய்வது குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் !

தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் அனுமதியற்ற கையடக்க தொலைபேசிகளை கண்காணித்து பயன்படுத்துவதைத் தடுக்க புதிய மென்பொருள் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எதிர்காலத்தில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் அனுமதி இல்லாமல் எந்தவொரு கையடக்க தொலைபேசிகளையும் கொள்வனவு செய்ய வேண்டாம் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு, பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பந்துல ஹேரத் விளக்கமளிக்கையில்,

தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்படாத எந்தவொரு கையடக்க தொலைபேசிகளையும் பொதுமக்கள் கொள்வனவு செய்ய கூடாது. இதுபோன்ற அங்கீகரிக்கப்படாத தொலைபேசி பயன்பாட்டைத் தடுக்க விரைவில் ஒரு புதிய தானியங்கி மென்பொருள் ஒன்றை செயல்படுத்துவோம். அங்கீகரிக்கப்படாத கையடக்க தொலைபேசிகளால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள சட்டவிரோத நடவடிக்கைகளைக் குறைத்து நாட்டில் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துபவர்களைப் பாதுகாப்பதே இதன் நோக்கமாகும்.

அங்கீகரிக்கப்படாத கையடக்க தொலைபேசிகள் மூலம் மேற்கொள்ளப்படும் சமூக விரோத நடவடிக்கைகளைக் குறைப்பதற்கும், கையடக்க தொலைபேசிகள் மூலம் சட்டவிரோத பரிவர்த்தனைகளில் ஈடுபடும் நபர்களை அடையாளம் காண்பதை மேலும் வலுப்படுத்துவதற்கும் இதன் ஊடாக எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் சந்தையில் சட்டப்பூர்வ கையடக்க தொலைபேசிகளின் பெருக்கம் அதிகரிப்பதன் காரணமாக எதிர்காலத்தில் விலைகள் குறைய அதிக வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார்.