பருத்தித்துறையில் நீதிமன்றுக்கு அருகில் பட்டாசு கொளுத்திய இருவர் கைது

யாழ்ப்பாணம், பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் முகமாக பட்டாசு கொளுத்திய இருவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை பருத்தித்துறை பகுதியில் உயிரிழந்தவரின் இறுதி ஊர்வலத்தின் போது, நீதிமன்றுக்கு அருகில் அதிக சத்தமான பெருமளவான வெடிகளை வெடித்தமையால், சத்தம் காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகள் சுமார் 30 நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்ட பருத்தித்துறை பொலிஸார் பட்டாசு வெடித்த  குற்றச்சாட்டில் இருவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வாக்குமூலங்களை பதிவு செய்தனர்.

வாக்கு மூலங்களை பதிவு செய்த பின்னர், அவர்களுக்கு எதிராக 15ஆம் திகதி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படும் எனவும், அன்றைய தினம் மன்றில் முன்னிலையாக வேண்டும் என அறிவுறுத்தி இருவரையும் பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர்.