யாழில் தனியார் பேருந்தின் சாரதி, நடத்துநரை தாக்கியவர் கைது!

புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வைத்து தனியார் பேருந்து ஒன்றின் சாரதி மற்றும் நடத்துநரை தாக்கிய சந்தேக நபர் ஒருவர் இன்றைய தினம் (15) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் புன்னாலைக்கட்டுவன் – யாழ்ப்பாணம் வழித்தட தனியார் பேருந்தினை மறித்து 3 பேர் கொண்ட குழுவினர், பேருந்தின் நடத்துநர் மீதும் சாரதி மீதும் தாக்குதல் மேற்கொண்டள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் மேற்கொண்ட முறைப்பாடு தொடர்பாக தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர் இன்றைய தினம் உரும்பிராய் பகுதியில் வைத்து, யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் தலைமறைவாகியுள்ளனர்.

கைதானவரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில், இன்னொருவரின் தூண்டுதலின் பேரிலேயே தாங்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் கடந்த 17.04.2024 அன்று இடம்பெற்ற நிலையில், சந்தேக நபர்களை கைது செய்யுமாறு கோரி தனியார் பேருந்து சங்கத்தினர் கடந்த 20.04.2024 அன்று போராட்டம் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.