தனி ஒரு அரசியல் கட்சியின் ஹர்த்தாலுக்கான அழைப்பிற்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆதரவு வழங்காது!

தனி ஒரு அரசியல் கட்சியின் ஹர்த்தாலுக்கான அழைப்பிற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது ஆதரவு வழங்காது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் தேவதாஸ் அனோஜன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுப்பதற்கு முன்னர் இதுதொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், தமிழ்த்தேசியம் சார்ந்த அனைத்துக் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் சமூக அமைப்புகள் என்பவற்றுடன் கலந்துரையாடல்களை நடாத்தி இருக்க வேண்டும். இது எதுவும் இலலாமல் ஒரு கட்சியை சேர்ந்த ஒருசிலர் தன்னிச்சையாக தீர்மானம் எடுத்துவிட்டு அதற்கு ஆதரவு கோரும் பட்சத்தில் மாணவர் ஒன்றியமாகிய எம்மால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது சுயமாக இயங்கும் ஒரு அமைப்பாகும். வடக்கு- கிழக்கிலிருந்து இராணுவ பிரசன்னத்தைக் குறைக்க வேண்டும், இராணுவத்தின் பிடியில் உள்ள தமிழ்மக்களின் காணிகள் மக்களிடமே மீளளிக்கப்பட வேண்டும், இராணுவத்தின் அராஜகம் ஒழிக்கப்பட வேண்டும் ஆகிய விடயங்களில் எம்மிடம் மாற்றுக் கருத்து இல்லை.

கடந்த காலங்களில் தமிழமக்களின் உரிமைசார் பிரச்சினைகளுக்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமாக நாங்கள் குரல் கொடுத்தமை அனைவரும் அறிந்த விடயமே.ஆனால், ஒரு சில தரப்பு தமது சுய லாபங்களுக்காக மேற்குறித்த விடயங்களைக் கையிலெடுத்து அரசியல் செய்வதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கவும் மாட்டோம். அதற்குத் துணைபோகவும் மாட்டோம்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் வழமை போலக் கற்றல் செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.