நீச்சல் தடாக பணிகளை நிறைவு செய்து அதனை பொதுமக்களின் பாவனைக்கு வழங்க வேண்டும்

கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட சந்தாங்கன்னி மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள  நீச்சல் தடாக பணிகளை நிறைவு செய்து அதனை பொதுமக்களின் பாவனைக்கு வழங்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் விரைவாக முன்னெடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின்  கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரம்,  விளையாட்டுத்துறை அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

கல்முனை  மாநகர சபைக்கு உட்பட்ட  சந்தாங்கன்னி  மைதானத்தை அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவைப்பாடு  காணப்படுகிறது. இப்பகுதியில் வாழும் தமிழ் மற்றும்  முஸ்லிம் இளைஞர், யுவதிகள் இந்த மைதானத்தை அண்மித்த பகுதியில் நீச்சல் தடாகம் ஒன்றை அமைக்குமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தினார்கள்.

இதற்கமைய 2018 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினரின் தலையீட்டுடன்  இந்த மைதானத்தின் நீச்சல் தடாகம் ஒன்றை அமைப்பதற்கு  அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிர்மானிப்புக்கு  53  மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்த நீச்சல் தடாகத்தின் நிர்மாணிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையிலும், தடாகத்தை  பொதுமக்களின் பயன்பாட்டுக்கு  வழங்க முடியாத நிலை காணப்படுகிறது. இந்த தடாகத்தை பராமரிப்பதற்கு தேவையான மின்சாரத்தை வழங்குவதற்கு விசேட மின்பிறப்பாக்கி ஒன்றை அப்பகுதியில் பொருத்த வேண்டும். என்று குறிப்பிடப்படுகிறது.இதற்கு 4 மில்லியன்   செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே இந்த நிதியை வழங்கி  இந்த அபிவிருத்தி திட்டத்தை நிறைவுப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.