வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனை பகுதியிலுள்ள வீடொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் ஹரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவரை செவ்வாய்க்கிழமை (05) கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆலோசனைக்கு அமைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் சம்பவதினமான நேற்று இரவுபிறைந்துறைச்சேனை பகுதியிலுள்ள போதை பொருள் வியாபாரியின் வீட்டை சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.
இதன்போது போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் வியாபாரியை 2 கிராம் 330 மில்லிக்கிராம் ஹரோயின் போதைபொருளுடன் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 45 வயதுடையவர் எனவும் இவர் நீண்டகாலமாக போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





