நாட்டில் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்காகவே எதிர்க்கட்சிகளால் பரந்துபட்ட கூட்டணி அமைக்கப்படுகிறது. அதனை விடுத்து எந்தவொரு அரசியல் நோக்கமும் அதில் இல்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
27 ஆம் பகுதி புதன்கிழமை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசியல் நோக்கங்களுக்காக எதிர்க்கட்சிகளால் பரந்துபட்ட கூட்டணி அமைக்கப்படவில்லை. நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்குவதற்காகவே நாம் ஒன்றிணைந்துள்ளோம். தற்போதைய அரசாங்கத்துக்கு பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான இயலுமை இல்லை. 40 000 பட்டதாரிகள் வீதியிலிருக்கின்றனர். வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைய அவர்களுக்கு தொழில் வழங்கப்படவில்லை.
விவசாயிகள் உரமானியம் இன்றி நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். நெல் விவசாயிகளுக்கு தம்மால் அருவடை செய்யப்படும் நெல்லை ஸ்திர விலைக்கு வழங்க முடியாத நிலைமை காணப்படுகிறது. நாட்டில் 50 சதவீதமானோர் வருமையிலிருப்பதாக தரவுகள் கூறுகின்றன. 71 சதவீதமானோர் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவைக் கோருகின்றனர்.
மொரட்டுவ வைத்தியசாலையில் மருத்துவ பீடத்தில் கற்பிப்பதற்கான வசதிகள் குறைவாகவே உள்ளன. இவ்வாறு பல்வேறு துறைகளிலும் பெருமளவான பிரச்சினைகள் உள்ளன. இவற்றில் ஒரு பிரச்சினைக்கு கூட அரசாங்கத்தால் தீர்வு வழங்க முடியவில்லை. பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துச் செல்கின்றன. இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வினைக் காண்பதற்காகவே நாம் ஒற்றுமையை ஏற்படுத்துகின்றோம் என்றார்.




