சட்டவிரோதமாக சம்பாதித்ததாக கூறப்படும் 73 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் தொடர்பில் யோஷித்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்சி பொரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணையை ஒத்திவைத்து கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி சஹன் மாபா பண்டார இன்று திங்கட்கிழமை (28) உத்தரவிட்டுள்ளார்.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்சி பொரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்றைய தினம் கொழும்பு மேல்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 22 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





