48 மணி நேரத்தில் காசாவில் 120 பேரை கொன்ற இஸ்ரேல்.. பெண் பிணை கைதியும் பலியானதாக ஹமாஸ் அறிவிப்பு

பாலஸ்தீன நகரமான காசாவின் மருத்துவமனை, குடியிருப்புகள் மீது இஸ்ரேல் மீது இஸ்ரேல் கடந்த 48 மணி நேரத்தில் நடத்திய வான் வழித் தாக்குதலில் 120 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இவற்றுள் காசாவின் ஜெய்டவுன் புறநகர்ப் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர். மேலும் மத்திய காசா மற்றும் தெற்கு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஏனையோர் பலியாகினர்.மேலும் வடக்கு முனையில் உள்ள மருத்துவமனையின் மீது நடத்தப்பட்டது. இதில் மருத்துவ ஊழியர்கள் படுகாயமடைந்ததோடு முக்கிய மருத்துவ உபகரணங்களும் சேதமடைந்தது.

வடக்குப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலிய பெண் பிணைக் கைதி ஒருவர் கொல்லப்பட்டு இருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்த்து கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி அந்நாட்டுக்குள் அதிரடியாக நுழைந்து ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். 200 பேர் வரை பிணைக் கைதிகளாக அழைத்துச்செல்லப்பட்டனர்.

இதில் 117 பேரை இஸ்ரேல் உயிருடன் மீட்டுள்ளது.இதற்கிடையே இந்த திடீர் தாக்குதலால் கோபமடைந்த இஸ்ரேல் கடந்த 13 மாதங்களாக பாலஸ்தீனிய நகரங்கள் மேல் தாக்குதல் நடத்தி 44 ஆயிரம் பேரை கொலை செய்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் 70 சதவீதம் பேர் [சுமார் 30,000 பேர்] பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று ஐநா அறிக்கை கூறுகிறது .