மொராக்கோவில் என்னதான் நடக்கிறது?

வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் இருந்து இரு தினங்களில் மட்டும் ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள சியூட்டா தீவுக்கு ஏறக்குறைய 60,000-க்கும் மேற்பட்ட மக்கள் கடல்வழியாக அகதிகளாக புலம்பெயர்ந்துள்ளனர். அவர்களைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளில் ஸ்பெயின் அரசு தீவிரத்துடன் செயல்பட்டு வருகிறது.

2021-ம் ஆண்டில் இதேபோன்ற அகதிகள் ஊடுருவலை ஸ்பெயின் அரசு சந்தித்தது. ஆனால், முன் எப்போதும் இல்லாத இந்த அளவு அகதிகளின் சட்டவிரோத வருகையைப் பார்த்து திகைத்து நிற்கிறது. இதனால், எல்லைப் பகுதியில் கூடுதல் பாதுகாப்புப் படைகளை ஸ்பெயின் நிறுத்தியுள்ளது.

சியூட்டா, மெலிலா தீவுகள் 1580-ம் ஆண்டு முதல் ஸ்பெயினின் கட்டுப்பாட்டில்தான் இருந்து வருகிறது. ஆனால், இந்த தீவுகளை உரிமை கோரி மொராக்கோ தற்போது ஸ்பெயினுடன் மோதலில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கெனவே ஸ்பெயின் – மொராக்கோ இடையே தூதரக உறவுகளில் உரசல் இருந்து வரும் நிலையில், இந்த புலம்பெயர்வு மீண்டும் விவாதங்களைக் கிளறியுள்ளது.

கடும் கோபத்தில் இத்தாலி

சியூட்டாவின் தாராஜல் கடற்கரையில் அரங்கேறும் காட்சிகள் ஸ்பெயின் மற்றும் இத்தாலிக்கு இடையே அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் விசா இல்லாத ‘ஷெங்கன்’ பயணப் பகுதியிலிருந்து ஸ்பெயினை சஸ்பெண்ட் செய்யுமாறு இத்தாலி வலியுறுத்தியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் தெற்கு நுழைவுவாயில் ஸ்பெயின். இங்கு நுழையும் அகதிகள், படிப்படியாக ஐரோப்பா முழுவதும் பரவி விடுவார்கள் என்ற அச்சத்தை இத்தாலி வெளிப்படுத்தியுள்ளது. மேலும், மிகப் பெரிய அளவிலான மக்கள் புலம்பெயர்வு என்பதால் ஒட்டுமொத்த ஐரோப்பிய யூனியனின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மொராக்கோவில் என்னதான் நடக்கிறது?

வட ஆப்பிரிக்காவின் மெக்ரிப் மண்டலத்தில் உள்ள 3.50 கோடி மக்களைக் கொண்ட சிறிய நாடுதான் மொராக்கோ. பொருளாதார வளர்ச்சியில் வட ஆப்பிரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை மொராக்கோ கொண்டிருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக சிக்கலான நிலையில் இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை 5.5 சதவீத வளர்ச்சியில் இருந்த மொராக்கோ நடப்பு ஆண்டில் 3 சதவீதத்தை பராமரிப்பது கடினம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வேலையின்மை, வறுமை…

வறட்சி, பஞ்சம், படித்த இளைஞர்கள் மத்தியில் வேலையின்மை அதிகரிப்பு, ஊழல், சமூகத்தில் ஏற்றத்தாழ்வு விரிவடைதல், ஏற்றுமதியில் சீரற்ற நிலை ஆகிய சிக்கல்களை மொராக்கோ கடந்த தசம ஆண்டுகளாக சந்தித்து வருகிறது. விலைவாசி ஏற்றம், அதற்கு ஏற்றார்போல் ஊதிய உயர்வு இல்லை. மக்களின் வாங்கும் சக்தி குறைந்து வறுமையின் பிடியில் சிக்கி, வாழ்க்கையை நடத்துவதில் சிரமங்களை சந்தித்து வருகிறார்கள்.

மொராக்கோ குறித்து சமீபத்தில் உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில், ‘மொராக்கோவில் வேலைவாய்ப்பை உருவாக்காத பொருளாதார வளர்ச்சி இருக்கிறது. வளர்ச்சி இலக்குகளுக்கும், அதன் தொழிலாளர் சந்தையின் உண்மை நிலைக்கும் இடையே இடைவெளி விரிவடைந்து வருகிறது. 2020 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில், 3.70 லட்சத்துக்கும் குறைவான வேலைவாய்ப்புகளே உருவாகின. கிராமப்புறங்களில் பெண்களின் வேலைவாய்ப்பு 19% ஆகக் குறைந்தது, பெரிய அளவிலான பாலின இடைவெளியைச் சந்தித்துள்ளது’ எனத் தெரிவித்தது.

ஜென்ஸீ இளைஞர்களின் போராட்டம்

காலநிலை மாற்றம் வேளாண் துறையைச் சிதைத்துவிட்டது. 10 ஆண்டுகளில் ஏற்பட்ட கடும் வறட்சியால் கிராமப்புறங்களில் 12 லட்சம் வேலைவாய்ப்புகள் (23% சரிவு) பறிபோயின. மொராக்கோவின் பொருளாதாரம் நசிந்து வருவது, மக்களின் வாழ்க்கைத் தரம் சீரழிந்து வருவது, அடிப்படை வசதிகள் கூட இல்லாததை அரசு கண்டு கொள்ளவில்லை. அதற்கு ஏற்றார்போல், மொராக்கோவின் பிரதமர் அஜிஸ் அஜானுஸ் மிகப் பெரிய கோடீஸ்வரர், தொழிலதிபர். சாமானிய மக்கள், இளைஞர்களின் வேலைவாய்ப்பு ஆகியவை பற்றி கவலைப்படாமல் மேல்தட்டு மனநிலையுடனே ஆட்சி நடத்துவாக மக்கள் விமர்சிக்கிறார்கள்

தரமான கல்வி, மருத்துவம், வேலையின்மையை போக்க நடவடிக்கை தேவை என்பதை மக்கள் கோரிய நிலையில், மொராக்கோ அரசோ மக்களின் தேவையை கருத்தில் கொள்ளவில்லை. மாறாக, 2030-ம் ஆண்டு ஃபிஃபா உலகக் கோப்பைக்காக பெரிய விளையாட்டு மைதானம் அமைக்க கோடிக்கணக்கான டாலர்களை செலவிட்டு வருகிறது.

அரசின் அலட்சியப் போக்கையும், பொறுப்பின்மை ஆட்சியையும் கண்ட ஜென்ஸீ இளைஞர்கள், கடந்த ஆண்டு நாடு முழுவதும் போராட்டத்தில் இறங்கியும் பயனில்லை. வேலையின்மை 35% எட்டிவிட்டது. 3 இளைஞர்களில் ஒருவர் வேலையில்லாமலும், படித்தவராகவும் இருக்கிறார். அதிலும் 15 முதல் 30 வயதுக்குள்ளான இளைஞர்களின் வேலையின்மை 35 சதவீதமாக உயர்ந்துவிட்டது.

மொராக்கோவில் மருத்துவத்தின் நிலை படுமோசம். 10,000 பேருக்கு 7.7 மருத்துவர்கள்தான். சிறு நகரங்களில் 10,000 பேருக்கு 4.4 மருத்துவர் என்ற நிலை. மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதியான தரமான மருத்துவமனைகள், பள்ளிக் கூடங்கள், உயர்கல்வி நிலையங்கள் அமைக்க அரசு ஆர்வம் காட்டவில்லை என்று இளைஞர்கள் விமர்சிக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் சமூகத்தில் பணக்காரர்கள், ஏழைகளுக்கான இடைவெளி விரிவடைவது, அதிகரித்து வரும் ஊழல், போலீஸாரின் அடக்குமுறை ஆகியவை மக்களை தங்களின் குடும்ப எதிர்காலத்தை தேடி அகதிகளாக ஸ்பெயினுக்குள் தஞ்சமடைகிறார்கள்.

சியூட்டாவுக்குள் ஏன் வருகிறார்கள்?

ஐரோப்பிய யூனியன் பகுதிக்குள் நுழைவதற்கு தெற்கு நுழைவுவாயில் சியூட்டாதான். சியூட்டாவுக்குள் நுழைந்துவிட்டால், அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குள் சென்று வேலைவாய்ப்புகளை தேடிக்கொள்ளலாம் என்று மொராக்கோ மக்கள் இங்கு தஞ்சமடைகிறார்கள். மேலும், ஸ்பெயின் அகதிகளைக் கையாள்வதில் மென்மையான போக்கை கடைபிடிப்பதால் எப்படியாவது ஐரோப்பிய நாடுகளுக்குள் சென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் மக்கள் சியூட்டாவுக்குள் வருகிறார்கள்.

ஸ்பெயின் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் சட்டவிரோதாக நாட்டுக்குள் வரும் அகதிகள் குறித்து ஓர் தீர்ப்பளித்தது. அதில், ‘கடலில் இடைமறிக்கப்படும் புலம்பெயர்ந்தோரை சட்ட நடைமுறைகள் இல்லாமல் உடனடியாக மொராக்கோவுக்கு திருப்பி அனுப்ப முடியாது’ எனத் தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து மனிதக் கடத்தலில் ஈடுபடுவோர் பணத்தைப் பெற்றுக் கொண்டு மொராக்கோ மக்களைக் கடலைக் கடக்க உதவியிருக்கலாம். இதனால் புலம்பெயர்ந்தோரின் திடீர் வருகை அதிகரித்துள்ளது என ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

புலம்பெயர்ந்து வருவோருக்கான கொள்கைகளை வலுவாக வைக்காததால்தான் ஸ்பெயினுக்குள் அகதிகள் வருகை அதிகரிக்கிறது என்று ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் மீது ஐரோப்பிய யூனியன் குற்றம்சாட்டுகிறது.

மொராக்கோ அரசே, தனது மக்களை புலம்பெயர்ந்து செல்ல ஊக்குவிப்பதாக குற்றசாட்டுகள் எழுந்தாலும், மக்கள் புலம்பெயர்ந்து சியூட்டா தீவுக்குள் சென்றது குறித்து மொராக்கோ அரசு இதுவரை அதிகாரபூர்வ விளக்கம் அளிக்கவில்லை.