பல தசாப்தங்களாக 36 ஆண்டுகளாக மக்கள் இராணுவத்திடம் நிலத்தினை பறிகொடுத்துவிட்டு உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களாகவும் வெளிநாட்டில் அகதிகளாகவும் வாழமுடியாத நிர்ப்பந்தங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களுக்கு போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் ஆனபோதும் மீள்குடியேற்ற உரிமை உறுதிப்படுத்தப்படவில்லை எனில் எப்படி ஏற்றுக்கொள்வது வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தி யாழ். மாவட்ட செயலகம் முன்பாக (15.06.2026) நாளை 36 ஆவது ஆண்டு நிறைவை மக்களால் நடாத்தப்படுபடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்திற்கு நாம் முழுமையான ஆதரவை வழங்குகின்றோம். அடிப்படையில் போராட்டம் நடாத்தும் மக்கள் அடிப்படை உரிமைகளை இழந்தவர்களாக சொல்லெணாத் துன்பங்களை அனுபவித்து முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் அவல வாழ்வு வாழ்கின்றனர். மக்களின் வளமான நிழங்கள் வலோத்காரமாக இராணுவத்தினரின் உல்லாச விடுதிகளாகவும் முகாம்களாகவும் உள்ளன. அவை கடந்த கால அரசாங்களின் காலத்தில் இடம்பெற்றது என இன்றைய அரசாங்கம் கூறித்தப்பித்துவிட முடியாது.
மக்களின் நிலங்கள் மக்களுக்கே சொந்தமானது என ஆட்சிக்கு வந்த அரசாங்கம் கட்டாயமாக தமது நிலங்களை தமக்கு விடுவிக்கும் எனக் காத்திருந்த மக்கள் இப்போது வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் வீதியில் போராடுகின்றனர். அரசாங்கம் பதவியேற்று ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில் மக்கள் நம்பிக்கையிழந்து போராடுகின்றனர். தமிழ் மக்களின் வளமான நிலங்கள் இராணுவ அதிகாரத்தின் வாயிலாக ஆட்சிப்படுத்தப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
இப்போதும் 3 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட பல கிராமசேவையாளர் பிரிவுகள் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ளன. இவற்றில் இராணுவம் வருமானம் ஈட்டுகின்றது. பொதுமக்கள் வாழ்விடமின்றி அலைகின்றனர். இந் நிலையில் மக்களின் போராட்டத்தில் முழுமையான நியாயம் உள்ளது. நாம் இவ் நியாயபூர்வமான போராட்டத்திற்கு எமது முழுமையான ஆதரவை வழங்குகின்றோம். இவ்வாறு வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார்.





