அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டம்: நீர்வழங்கல் துறையில் புதிய மறுமலர்ச்சி

அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்ட தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நீர்வழங்கல் துறையில் புதிய மறுமலர்ச்சி  வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.

அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் வெள்ளிக்கிழமை (10) கலந்துகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கெபித்திகொல்லேவ, ஹொரவபொத்தான மற்றும் கஹடகஸ்திகிலிய ஆகிய பிரதேசங்களின் மக்களுக்கு இன்றைய நாள் ஒரு விசேடமான நாளாகும். பொதுவாக இப்பிரதேசங்கள் பின்தங்கிய பிரதேசங்களாகவே அடையாளம் காணப்பட்டுள்ளன. வசதிகள் அற்ற, நகரத்திலிருந்து மிகவும் தொலைவில் அமைந்துள்ள பிரதேசங்களாகவே இவை பார்க்கப்படுகின்றன.

அதேபோல், இது சிறுநீரக நோய் அதிகம் உள்ள, ஏழை விவசாயிகள் வாழ்கின்ற ஒரு பிரதேசமுமாகும். வறுமை, ஏழ்மை மற்றும் குறைவான வசதிகள் என்பனவே இப்பிரதேசத்திற்கு கிடைத்துள்ள பெயர்களாகும். ஆனால், எங்களது ஆட்சிக் காலத்தில் இந்த பெயர்களை நாம் அகற்றுவோம்.

அனைத்து வசதிகளையும் வழங்கி, இப்பிரதேச மக்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதே எங்களது எதிர்பார்ப்பாகும். இந்த நீர் திட்டத்தின் மூலம் அதற்கானதொரு அடித்தளத்தை இடுவதற்கே எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பான் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடனும், இலங்கை அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்புடனும் தான் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

எனவே, இந்த சந்தர்ப்பத்தில் நாம் ஜப்பான் அரசாங்கத்திற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். நாம் அடுத்தடுத்து பல நீர்வழங்கல் திட்டங்களை எதிர்வரும் காலத்தில் திறந்து வைக்கவுள்ளோம்.

அவற்றுக்கான அடிக்கற்களையும் நாட்டவுள்ளோம். வெள்ளிக்கிழமை (10) மாலை தம்புத்தேகமவில் ஒரு மாபெரும் திட்டம் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில வாரங்களில் லக்கல நீர் திட்டத்தை நாம் திறந்து வைப்போம்.

இன்னும் சுமார் ஒன்றரை மாதங்களில் பொல்கஹவெல – பொத்துஹெர நீர் திட்டத்தை மக்கள் மயப்படுத்துவோம். அதேபோல், பாததும்பர நீர் திட்டத்தையும் மிக விரைவில் மக்கள் மயப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

நீர்வழங்கல் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம், மறுமலர்ச்சி மற்றும் புத்துயிர்ப்பை ஏற்படுத்துவதற்காக நாம் பெருமளவு நிதியை முதலீடு செய்துள்ளோம்; எதிர்காலத்திலும் முதலீடு செய்ய எதிர்பார்த்துள்ளோம் என்றார்