அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் பெப்ரவரி 09 ஆம் திகதி முதல் மீண்டும் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பதவியில் கடமையாற்றும் அதிகாரிக்கு எதிரான விசாரணைகளை சுயாதீனமாக முன்னெடுப்பதற்காக, அவரை தற்காலிகமாகவேனும் அந்தப் பதவியிலிருந்து நீக்கக் கோரி அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தினால் கடந்த 21 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படவிருந்த தொடர் வேலைநிறுத்தப் போராட்டம், கடந்த 27 ஆம் திகதி சுகாதார பிரதி அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
கடந்த 27 ஆம் திகதி நடைபெற்ற அந்தப் பேச்சுவார்த்தையில், இப்பிரச்சினைக்கு 48 மணித்தியாலங்களுக்குள் தீர்வு காண்பதாக உறுதியளிக்கப்பட்ட போதிலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் பெப்ரவரி 09 ஆம் திகதி முதல் மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.





