அரியாலையில் திண்மக் கழிவுகளை தரம் பிரிக்கும் நிலையம் தொடர்பில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய்யான தகவல்களை பரப்பி மக்களை பிழையாக வழிநடத்துகின்றனர் என நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளார்.
நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் திண்மக் கழிவுகளை தரம் பிரிக்கும் நிலையம் அரியாலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
அதற்கு எதிராக இன்றைய தினம் புதன்கிழமை (8) அரியாலை பகுதியை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் இடம்பெற்ற பகுதிக்கு வருகை தந்திருந்த தவிசாளரிடம் மக்கள் மகஜர் ஒன்றினை கையளித்தனர்.
அதன் பின்னர் தவிசாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
நல்லூர் பிரதேச சபையின் திண்மக் கழிவுகளை சேகரிக்கும் முகமாக அரியாலை பகுதியில் சகல அனுமதிகளை பெற்றே பிரதேச சபை செயலாளரால் கட்டுமான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கூட இந்த இடத்திற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து, பிரதேச செயலாளரால் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
நல்லூர் பிரதேச சபையின் திண்மக் கழிவுகளை தரம் பிரிக்கும் நிலையமான காரைக்கால் பகுதியில் இருந்த நிலையத்தில் தற்போது அவற்றின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன.
அரியாலையில் இந்த இடம் பொருத்தமான இடமாக காணப்பட்டமையால் அதில் திண்மக் கழிவுகளை தரம் பிரிக்கும் நிலையத்தை அமைத்துள்ளோம்.
இது குப்பைகளை கொட்டும் இடமில்லை. தரம் பிரிக்கும் இடம். இந்த மக்களை சிலர், குப்பைகளை கொட்டும் இடமெனக் கூறி குழப்பியுள்ளனர்.
அவர்கள், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய்யான தகவல்களை பரப்பி மக்களை பிழையாக வழிநடத்துகின்றனர்.
வட மாகாண ஆளுநரிடம் திண்மக் கழிவகற்றலுக்கு பொருத்தமான திட்டத்தினை தீட்டுமாறு கோரியுள்ளோம். அவ்வாறான திட்டங்கள் நடைமுறைக்கு வந்தால் இந்த இடத்தினை நாம் தொழில் பேட்டையாக மாற்றி அமைப்போம்.
இது ஒரு சுற்றுலாத்தளம் என்கிறார்கள். இது ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள மயானத்திற்கு அருகிலேயே அமைக்கப்பட்டுள்ளது.
திண்மக் கழிவுகளை அகற்ற வேறு இடங்கள் எமக்கு கிடைக்கப்பெற்றால், இந்த இடத்தினை தொழில் பேட்டையாக மாற்றி அமைப்போம் என உறுதியளிக்கிறோம் என தெரிவித்தார்.