அர்ச்சுனா எம்.பியால் கொலை மிரட்டலுக்கு உள்ளான பெண்ணுக்கு விளக்கமறியல்..

அர்ச்சுனா எம்.பியால் மிரட்டலுக்கு உள்ளான குடும்பப் பெண்ணை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்ற நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன்போது அவரது ஒரு வயது குழந்தையும் அவருடனேயே இருக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்றையதினம்(25) பெரியவிளான் பகுதியில் உள்ள காணியை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சுத்தம் செய்ய முற்பட்டார். இந்நிலையில் அந்த பகுதியில் தமது காணியும் இருப்பதாக தெரிவித்து சிலர் அவருடன் முரண்பாட்டில் ஈடுபட்டனர்.

குறித்த காணி எல்லை பிரச்சினை தொடர்பாக நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு நடைபெற்று வருகிறது. அந்தவகையில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பெண்ணின் உறவினரான இளைஞர் ஒருவரும் அந்த இடத்திற்கு சென்ற நிலையில் அர்ச்சுனா எம்.பி அந்த இளைஞனை எட்டி காலால் உதைத்ததாக அந்த இளைஞரின் உறவினர்கள் கூறுகின்றனர்.

பின்னர் அர்ச்சுனா இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த நிலையில் குறித்த பெண்ணை கைது செய்த பொலிஸார் மல்லாகம் நீதிமன்றத்தில் அவரை இன்றையதினம் முற்படுத்தினர்.

இவ்வாறான சூழ்நிலையிலேயே அவரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

இருப்பினும் பகிரங்க கொலை மிரட்டல் மற்றும் இளைஞரை தாக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அர்ச்சுனா எம்.பியால் கொலை மிரட்டலுக்கு உள்ளான பெண்ணுக்கு விளக்கமறியல்.. | Woman Receives Death Threats From Archuna Mp