இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத வருகை தற்போது வட பகுதியைத் தாண்டி தென்பகுதி வரை ஊடுருவியுள்ளதாகவும், எனவே அரசாங்கம் இனியாவது விழித்துக்கொண்டு அவர்களின் வருகையைக் கட்டுப்படுத்தத் தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம். ஆலம் வலியுறுத்தியுள்ளார்.
மன்னாரில் இன்று சனிக்கிழமை (08) மதியம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இச்சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
தமிழக மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் வந்து அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவது வடபகுதி மீனவர்களிடையே பூதாகரமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. கடந்த காலங்களில் எமது போராட்டங்கள் மூலம் அவர்களின் வருகையைக் ஓரளவு கட்டுப்படுத்த முடிந்தபோதிலும், இம்முறை தடைக்காலம் முடிந்த ஜூன் மாதம் முதல் அவர்களின் அத்துமீறலும் அடாவடித்தனமும் இலங்கை கடற்பரப்பில் மிக தீவிரமடைந்துள்ளது.
அண்மையில் தீவக மீனவர்கள் முன்னெடுத்த பிரம்மாண்ட கடல்வழிப் போராட்டத்தைக் கூட மத்திய அரசுகளோ அல்லது இலங்கை அரசோ பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.
இந்திய மீனவர்களின் அழிவுகரமான மீன்பிடி முறைகளால் கடல் வளம் அழிக்கப்படுவதோடு, எமது மீனவர்களின் வாழ்வாதாரமும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த குறுகிய காலப்பகுதிக்குள் பல கோடி ரூபாய் பெறுமதியான மீன்பிடி வலைகளும் உபகரணங்களும் சேதமாக்கப்பட்டுள்ளன. எமது மீனவர்கள் கதறி அழுதும், தமிழக மீனவர்கள் எவ்வித இரக்கமுமின்றி இச்சம்பவங்களை வேடிக்கையாகப் பார்த்து வருகின்றார்கள்.
தற்போதைய அரசாங்கம் அமைக்கப்பட்டு இரண்டு வருடங்கள் நிறைவடையும் நிலையிலும், “இராஜதந்திர ரீதியில் பேசித் தீர்வு காண்போம்” என கடற்றொழில் அமைச்சர் கூறுவது பயனற்றது. சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி எமது எல்லையில் தொழில் செய்வதை பேசித் தீர்க்க முடியாது. பேச்சுவார்த்தைக்குப் பதிலாக, எல்லைத் தாண்டுவதைத் தடுக்கும் உறுதியான நடவடிக்கைகளையே அரசு உடனடியாக எடுக்க வேண்டும். அதற்கு வடபகுதி மீனவர்கள் முழு ஆதரவையும் வழங்குவார்கள்.
தற்போது இந்திய மீனவர்களின் வருகை வடபகுதியைக் கடந்து தென்பகுதியில் புத்தளம், கற்பிட்டி, சிலாபம் வரை ஊடுருவியுள்ளது. இதுவரை வடபகுதி தமிழ் மீனவர்கள் அனுபவித்த துன்பங்களை இனி தென்பகுதிச் சிங்கள சமூகமும் அனுபவிக்கப் போகின்றது. இனியாவது அரசாங்கம் இந்த விடயத்தில் கவனம் செலுத்துமா?
அரசாங்கம் தொடர்ந்தும் மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்தால், இலங்கையின் கடல் வளங்கள் மீளப் பெற முடியாதவாறு முழுமையாக அழிக்கப்பட்டு, கடற்றொழிலையே கைவிட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார்.





