மாற்றம் என்று சொல்லி இனவாதமற்ற புதிய அரசியல் கலாசாரமொன்று உருவாகும் என்று நம்பி வாக்குச் செலுத்திய தமிழ்மக்கள் இன்று முழுவதுமாக அரசினால் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். இது இன்று, நேற்றில்லை 76 வருடகாலமாக இந்த நாட்டில் இது தான் நடந்தேறியிருக்கின்றது. எந்தவொரு சிங்களபேரினவாத அரசும் தமிழ்மக்களின் பக்கம், நீதியின் பக்கம் நின்றதில்லை என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை (18.11.2025) நடைபெற்ற ஊடக சந்திப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
திருகோணமலையில் தமிழர் தாயகத்தில் கடற்கரைப் பிரதேசத்தில் சட்டத்திற்கு முரணாக புத்த பிக்குகளினால் புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டிருக்கின்றது. அங்குள்ள தமிழ்மக்களின் கடும் எதிர்ப்பின் பின் சட்ட அனுமதியற்ற கட்டுமானம் என்று சொல்லி பொலிஸாரால் அப்புறப்படுத்தப்படுகின்றது. இதன்பிறகு நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தால் புத்தர்சிலையின் பாதுகாப்புக் காரணமாகத் தான் அப்புறப்படுத்தப்பட்டது. மீண்டும் நிறுவப்படும் என்ற பின் மீண்டும் அதே இடத்தில் அரசாங்கத்தால் புத்தபிக்குகள் மற்றும் பொலிஸாருடன் இணைந்து அதே புத்தர் சிலை நிறுவப்படுகின்றது. மாற்றம் என்று சொல்லி இனவாதமற்ற புதிய அரசியல் கலாச்சாரம் ஒன்று உருவாகும் என்று நம்பி வாக்குச் செலுத்திய தமிழ்மக்கள் இன்று முழுவதுமாக அரசினால் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். இது இன்று, நேற்றில்லை 76 வருட காலமாக இந்த நாட்டில் இதுதான் நடந்தேறியிருக்கின்றது.
சட்டமுரணாகத் தமிழர் தாயகத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர்சிலை அகற்றப்பட்ட பின் நாடாளுமன்றத்தில் மீண்டும் நிறுவுவோம் என்று குறிப்பிட்டு மீளச் சிலையை மக்களின் எதிர்ப்புக்களை மீறி நிறுவியிருக்கும் செயல் எந்த அரசு அதிகாரத்திற்கு வந்தாலும் சிங்களப் பேரினவாதப் போக்கு மாறாது என்பதையே உணர்த்துகின்றது. புத்தர் சிலையின் பாதுகாப்புக் கருதி அகற்றப்பட்டிருக்கின்றது என்று சொல்லுவது தொடர்ச்சியாக சிங்கள மக்களிடத்தில் தமிழர்களைத் தீயவர்களாக சித்தரிப்பதைத் தான் எடுத்துக்காட்டுகிறது. புத்தர் சிலையை வைத்தது யார்?, அமைதியாகத் தங்கள் அன்றாட வாழ்க்கையை வாழும் தமிழ்மக்களைக் குழப்பியது யார்?, புத்தர் சிலையை அகற்ற வந்த பொலிஸாரின் கன்னத்தில் அறைந்தது யார்?, இவர்களுக்கு எதிராக எல்லாம் இந்த நாட்டில் சட்டம் செயற்படாதா? நாட்டின் ஆட்சியாளர்கள் மக்களுக்கான சேவையை ஆற்றுவதைக் காட்டிலும் புத்த பிக்குகளின் பேச்சை வேதவாக்காகக் கேட்டு நடப்பதையே இனப்பிரச்சினை தொடங்கிய காலகட்டத்திலிருந்து அவதானிக்கக் கூடியதாகவிருக்கின்றது.
இனப் பிரச்சினையின் முக்கிய காரணமே சிங்கள பௌத்தமயமாக்கல் தான். யுத்தத்தின் ஆணிவேரும் இதுதான். தொடர்ச்சியாகத் தமிழர் நிலங்கள் புத்த வழிபாடு என்ற பெயரிலே பௌத்த சிங்கள மயமாக்கப்பட்டுக் கொண்டே இருந்து வந்துள்ளது. சிங்களக் குடியேற்றங்களால் தமிழர் குடியேற்றப் பரம்பல் மாற்றியமைக்கப்பட்டுக் கொண்டே வந்துள்ளது. வரலாற்றில் மகாவலி ஓயா மற்றும் கல் ஓயாக் குடியேற்றம் என்று தமிழர் நிலங்கள் முற்றுமுழுதாக பெயர் மாற்றம் பெற்று முழுவதுமாக மாறியிருக்கிறது. தொடர்ச்சியாக இன்றுவரை தமிழர்களின் தொல்லியல் நிலங்களான குருந்தூர் மலை, வெடுக்குநாறிமலை, உகந்தை மலை என்று பல்வேறு இடங்களில் பௌத்த ஆக்கிரமிப்பு நடைபெறுகின்றது. தையிட்டி, திரியாய் என்று தமிழர் நிலங்களும் இதில் இலக்கு வைக்கப்பட்டிருக்கின்றது. இதிலிருந்து சிங்களமக்கள் விளங்கிக் கொள்ளக் கூடிய விடயம் என்னவென்றால் தமிழ்மக்கள் சிங்கள மக்களின் வழிபாட்டுக்கு என்றுமே எதிரானவர்கள் இல்லை. நாங்கள் அனைத்து மதத்தையுமே சமமாக மதிப்பவர்கள். அனைத்துச் சமய வழிபாடுகளையும் மதித்து நடப்பவர்கள். அவமதிப்பது கிடையாது. ஆனால், வழிபாடு என்ற பெயரிலே திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புக்களால் தமிழருடைய நிலங்கள் பறிபோவதென்பதை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள மாட்டோம். தமிழர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அவற்றுக்குப் பல்வேறு கட்டுக்கதைகள் கட்டப்பட்டு பௌத்த நிலமாக மாற்றுவதற்கு நாங்கள் எதிரானவர்கள். தமிழருடைய பூர்விகம் கேள்விக் குறியாக்கப்படுவதற்கு எதிரானவர்கள், தமிழருடைய தொல்லியல் ரீதியான நிலம் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிரானவர்கள், தமிழர் குடியேற்றப்பரம்பல் மாற்றியமைக்கப்படுவதற்கு எதிரானவர்கள், தமிழர்களுடைய இனவிகிதத்தை திட்டமிட்டு மாற்றுவதற்கு எதிரானவர்கள், நாங்கள் ஏன் ஒற்றையாட்சி அரசியலைமைப்பை மறுக்கின்றோம் தெரியுமா? சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு அடிபணிந்து கிடப்பதனால் தான்.
இங்கே முதலில் சுற்றுலாத்தளமான கடற்கரையில் புத்தர் சிலையை அமைப்பதற்கான அனுமதி வழங்கியது யார்?, பிரதேச சபையிடமிருந்தோ இல்லாவிட்டால் நகர சபையிடமிருந்தோ அனுமதி பெறப்பட்டதா ? இல்லை. முற்றுமுழுதாகப் புத்தபிக்குகளே இலங்கையின் நிரந்தர நிறைவேற்று ஐனாதிபதிகளாகவிருந்து வந்துள்ளனர்.சுருக்கமாக சொல்லுவதென்றால் நாட்டின் அரச இயந்திரம் புத்த பிக்குகளுக்கு அடிபணிந்து இருக்கின்றது. முழு சட்டங்களையும் தங்கள் பக்கம் வளைக்கும் வலது சாரிகளின் பக்கம் அரசு முழுவதுமாக திரும்பி நிற்கின்றது. தாங்கள் இடது சாரிகள், கம்யூனிச சிந்தாந்தத்தை உள்வாங்கி கொண்டு செயற்படுவதாக தங்களை தாங்களே கூறிக்கொள்ளும் அரசு நாட்டில் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுபான்மையினரான தமிழ்மக்கள் பக்கம் ஏன் நிற்கவில்லை? என்று ஒரு கேள்வி எழுகிறது. இன்னும் எவ்வளவு காலத்துக்கு நாங்கள் அடக்குமுறைகளையும், ஆக்கிரமிப்புக்களையும் தாங்கிக் கொள்ள முடியுமென்று தெரியவில்லை. இந்தப் பிரச்சினையில் ஊடகவியலாளர்களும் தாக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது இலங்கையின் ஐனநாயகத்தைக் கேள்விக்குறியாக்கும் செயல்.
ஏன் இவ்வளவு காலமும் பயங்கரவாத தடைச்சட்டம் எடுக்கப்படவில்லை?, அரசியல் கைதிகள் முழுவதுமாக விடுதலை செய்யப்படவில்லை, இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் சார்பில் வடக்கு- கிழக்கில் தெரிவு செய்யப்பட்டிருக்கும் உறுப்பினர்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றார்கள்? தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்காக, அரசியல் தீர்வுக்காக இதுவரை வாய் திறந்திருக்கின்றார்களா? ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் பின்னால் ஒரு அரசியல் அரங்கேற்றம் நிகழுவதாகவே நாங்கள் கணிக்கின்றோம்.
புத்தர் சிலையை வைத்துப் பார்த்து தமிழ்மக்கள் இன்னும் தமிழ் உணர்வுடன் தான் இருக்கின்றார்களா? என்று பார்ப்பது. அவர்கள் எதிர்க்கிறார்கள் என்றவுடன் அகற்றுவது, சிங்கள மக்களிடத்தில் செல்வாக்கு சரியுமென்று பின் மீண்டும் நிறுவுவது.அரசாங்கத்தைப் பலவீனப்படுத்துவது எதிர்க்கட்சியின் திட்டமிடலாக இருக்கலாம். ஒன்று தமிழ்மக்களிடத்தே பலவீனப்படுத்துவது அல்லது சிங்கள மக்களிடத்தே பலவீனப்படுத்துவது.இறுதியில் புற்றுக்குள்ளே இருந்து வெளியே வந்திருக்கும் பாம்புகளைப் போல் சிலர் வெளியே வந்திருக்கின்றனர். யாரென்று பார்த்தால் கடந்த ஐனாதிபதித் தேர்தலில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆதரவளித்தவர்கள், மாவீரர் தினத்தை யார் எடுத்து நடாத்துவது? என்று தங்களுக்குள் சண்டையிட்டவர்கள். நீங்கள் உங்களுக்குள் முழுவதுமாக ஒற்றுமை அடையாவிட்டால் எதையுமே சாதிக்க முடியாது.
மிகச்சிறந்த அரசியல் தெளிவு பெற்ற நேர்மையான இளைய தமிழ்த்தேசிய அரசியல் கலாச்சாரம் வடகிழக்கில் வரவேண்டும். அப்போது தான் வெள்ளம் வர முன் அணை கட்ட முடியும். தமிழ்மக்களாக அனைவரும் உங்கள் சிந்தனைகளில் ஒன்றிணையுங்கள்.நாங்கள் ஒன்றை நம்புகின்றோம் தூய தமிழ்த்தேசியம் நிச்சயம் வெல்லும் எனவும் அந்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.



