ஒட்டிசுட்டான் பகுதியில் யானை தாக்குதல் – முச்சக்கரவண்டி சாரதி படுகாயம்

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டிசுட்டான் பகுதியில் வெள்ளிக்கிழமை (09) இரவு யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

முல்லைத்தீவில் இருந்து ஒட்டிசுட்டான் ஊடாக வவுனியா நோக்கி முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த முச்சக்கரவண்டியில் இருவர் பயணித்திருந்த நிலையில், திடீரென வீதிக்கு குறுக்காக வந்த யானை தாக்குதல் நடத்தியதாகவும் இந்த தாக்குதலின் காரணமாக முச்சக்கரவண்டி தடம் புரண்டு விபத்துக்குள்ளானதுடன், வண்டி பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் முச்சக்கரவண்டி சாரதியான வவுனியா சிறிநகர் பகுதியைச் சேர்ந்தவரே படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த நபர் உடனடியாக முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.